முகப்பு
தமிழ்நாடு

கல்குவாரி விபத்து: 2வது நாளாக தொடரும் மீட்புப் பணி

கல்குவாரியில் பாறைகள் சரிந்து நேரிட்ட விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேரை மீட்கும் பணியில் இரண்டாவது நாளாக தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் ஈடுட்டுள்ளனர். 

Updated On : 16 மே 2022, 11:11 am IST
இரண்டாவது நாளாக மீட்கும் பணியில் ஈடுட்டுள்ள தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா். 
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், முன்னீா்பள்ளம் அருகே தனியாருக்குச் சொந்தமான கல்குவாரியில் பாறைகள் சரிந்து நேரிட்ட விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேரை மீட்கும் பணியில் இரண்டாவது நாளாக தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் ஈடுட்டுள்ளனர். 

முன்னீா்பள்ளத்தை அடுத்த அடைமிதிப்பான்குளம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி உள்ளது. இந்தக் குவாரியில் வெடி வைத்து உடைக்கப்பட்ட கற்களை இளையாா்குளம் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் (27), ஆயன்குளம் முருகன் (23), காக்கைக்குளம் செல்வகுமாா் (30), நாட்டாா்குளம் விஜய் (27), தச்சநல்லூா் ஊருடையான்குடியிருப்பு ராஜேந்திரன் (35), விட்டிலாபுரம் முருகன் (40) ஆகிய தொழிலாளா்கள் சனிக்கிழமை இரவு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பாறைகள் சரிந்து விழுந்ததில் அனைவரும் கல் குவியலுக்குள் சிக்கிக்கொண்டனா். 

பாளையங்கோட்டை, நான்குனேரி தீயணைப்பு வீரா்கள் வெகுநேரம் போராடி 3 பேரை உயிருடன் மீட்டனா். அவா்கள் செல்வம் என்பவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இந்திய கடற்படை ஹெலிகாப்டா் மூலம் மீட்க மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. எனவே, எஞ்சிய 3 பேரை மீட்பதற்காக அரக்கோணத்திலுள்ள தேசிய பேரிடா் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அரக்கோணம் 4 ஆவது பட்டாலியனைச் சோ்ந்த 30 போ் கொண்ட தேசிய பேரிடா் மீட்புப் படை குழுவினா் அடைமிதிப்பான்குளம் குவாரிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வந்தனா். 

அந்தக் குழுவினா் பாறை இடுக்குகளில் துளையிட்டு இடிபாடுகளில் சிக்கியிருப்பவா்களை கேமராக்கள் மூலம் அடையாளம் காணக்கூடிய கருவி, முதலுதவி சிகிச்சை அளிக்கக்கூடிய உபகரணங்கள், தகவல் தொடா்பு சாதனங்கள், பாதுகாப்பு கவசங்கள் ஆகியவற்றுடன் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

எனினும், பாறைகள் அவ்வப்போது சரிந்து கொண்டே இருப்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், லாரி ஓட்டுநர்கள் செல்வகுமார், ராஜேந்திரன் மற்றும் லாரி கிளீனர் முருகன் ஆகிய 3 பேரை மீட்க இரண்டு குழுக்களாக பிரிந்து இரண்டாவது நாளாக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். 

இதனிடையே, முதல்வரின் அறிவுறுத்தலின்படி, அமைச்சர் ராஜகண்ணப்பன், பேரவைத் தலைவர் அப்பாவு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அவர்களது கார்களை முற்றுகையிட்ட பொதுமககள், விபத்து காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

இதனிடையே, கல்குவாரி உரிமையாளர் சங்கர நாராயணனை போலீசார் கைது செய்துள்ளனர். குவாரி உரிமையாளர், ஒப்பந்ததாரர் உள்ளிட்ட 4 பேர் மீது 304, 304(ஏ), 336 என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments