சென்னையில் பெய்த கனமழைக்கு இருவர் பலி: தொடர்ந்து ஆரஞ்சு எச்சரிக்கை!
சென்னையில் பெய்த கனமழைக்கு இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் பெய்த கனமழைக்கு இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. ஒரு சில பகுதியில் மரங்கள் சாய்ந்துள்ளது.
இந்நிலையில், கனமழைக்கு இருவர் உயிரிழந்துள்ளனர். புளியந்தோப்பில் உள்ள பிரகாஷ் ராவ் காலனியில் வசிக்கும் சாந்தி (47). வீட்டின் பால்கனியின் சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
மற்றொரு சம்பவத்தில் வியாசர்பாடியில் 52 வயதான ஆட்டோ ஓட்டுநர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். குடிபோதையில் இருந்த தேவேந்திரன், திங்கள் இரவு வியாசர்பாடி பிவி காலனியில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, தெருவில் தேங்கியிருந்த மழைநீரில் நடந்துசென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரது உடல் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளம், மாஹே பகுதிகளில் நவம்பர் மாதம் 3ஆம் தேதி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
இலங்கை கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக நவம்பர் 2ஆம் தேதி வரை தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, இராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் எஸ் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காணொலிக் காட்சி மூலம் ஆய்வு செய்தார்.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் 35 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை உபரி மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், 43 அணைகளில் நீர் இருப்பு 75 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உள்ளதாகவும், 17 அணைகளில் 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை நீர் இருப்பு உள்ளது எனவும் அவர் கூறினார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூரில் உள்ள ரெட் ஹில்ஸில் 13 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.