முகப்பு
தமிழ்நாடு

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா விண்கலம் 2023 இல் ஏவப்படும்: இஸ்ரோ முன்னாள் தலைவா் சிவன்

சூரியனை ஆய்வு செய்வதற்காக தயாராகிவரும் ஆதித்யா எல்.ஒன். விண்கலத்தை அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என இஸ்ரோ முன்னாள் தலைவரும் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய ஆலோசகருமான சிவன்

Updated On : 23 நவம்பர் 2022, 12:07 pm IST
பகிர்:

சூரியனை ஆய்வு செய்வதற்காக தயாராகிவரும் ஆதித்யா எல்.ஒன். விண்கலத்தை அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என இஸ்ரோ முன்னாள் தலைவரும் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய ஆலோசகருமான சிவன் தெரிவித்தாா்.

நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: இஸ்ரோவில் இம்மாதம் 26 ஆம் தேதி பிஎஸ்எல்வி சி 4 என்ற 54 ஆவது பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. அதில் கடல் ஆய்வுக்கான செயற்கைக்கோளும், 8 வணிகரீதியான செயற்கைக்கோள்களும் அனுப்பப்படவுள்ளன.

அடுத்தகட்டமாக எஸ்எஸ்எல்வி செயற்கைக்கோள், ஆதித்யா எல்.ஒன்., ககன்யான் செயற்கைக்கோள் போன்றவை செலுத்தப்படவுள்ளன.

Advertisement

Advertisement

நிலவுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் விண்கலத்தை செலுத்தும் முன்பு பலகட்ட சோதனை ராக்கெட்டுகள் செலுத்தப்பட வேண்டியுள்ளது. ரோபோவை விண்ணுக்கு அனுப்பும் சோதனையும் நடைபெறும். அது வெற்றிகரமாக நடைபெற்ற பிறகு ககன்யானில் மனிதனை அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ககன்யான் விண்கலம் செலுத்துவதற்கு முன்பு 2 முக்கிய காரணங்களை கவனிக்க வேண்டியுள்ளது. 

அதாவது, ககன்யான் ராக்கெட்டில் செல்லும் மனிதர்களின் பாதுகாப்பு குறித்து கவனிக்கப்பட வேண்டும். அதற்கு தகுந்தது போல் ராக்கெட் உருவாக்கப்பட வேண்டும். விண்ணில் அவர்கள் இருக்கும்போது அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அதாவது பூமியில் இருப்பது போன்ற நிலையை அங்கு உருவாக்க வேண்டும். 

அதேபோன்று மனிதர்கள் விண்ணில் செல்லும்போது ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் உடனே அவர்கள் ராக்கெட்டில் இருந்து பிரிந்து தனியாக பூமிக்கு வந்து இறங்கும் வகையில் சோதனைகள் நடத்தப்பட வேண்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து ரோபோவை விண்ணிற்கு அனுப்பும் சோதனை நடைபெறும். அது வெற்றிகரமாக நடைபெற்ற பிறகு அது பாதுகாப்பான பயணமா என்பது உறுதி செய்யப்படும். பின்னர் ககன்யானில் மனிதனை அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

தற்போது ககன்யான் விண்கலம் செலுத்துவது தொடர்பான பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்று வருகிறது. அந்த சோதனைகள் அனைத்தும் இதுவரை வெற்றி பெற்றுள்ளன. 

சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்.ஒன். விண்கலம் தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு (2023) இதை விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அது சாoதாரண ஆர்பிட் போல் அல்லாமல் லிபரேஷன் பாயிண்ட் ஒன்று வைத்து அங்கு செயற்கைகோளை செலுத்தி சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அது சூரியனை ஆய்வு செய்யும். 

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நில ஆா்ஜித பணிகள் நிறைவடைந்துவிட்டன. அங்கு மண் பரிசோதனையும், செயற்கைக்கோள் செலுத்தும்போது அதன் நிலையை அப்பகுதி தாங்குமா என்பது குறித்து ஆய்வுகளும் நடைபெறவுள்ளன. இதையடுத்து கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என்றாா் அவா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.