நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் (எக்ஸ்) பதிவிட்டுள்ள உதயநிதி, மக்களவையில் மர்ம நபர்கள் புகுந்து புகைக்குண்டுகளை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பின்மையையே காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் நடந்த இந்த சம்பவம் கண்டனத்துக்குரியது. இது தொடர்பாக உடனடியாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காத வகையில், நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என உதயநிதி குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் அலுவல்கள் இன்று வழக்கம்போல் நடைபெற்று கொண்டிருந்தபோது, மக்களவையின் பார்வையாளர்கள் மடத்தில் அமர்ந்திருந்த இருவர் திடீரென்று பிற்பகல் 1.12 மணியளவில் அவைக்குள் குதித்தனர்.
‘சர்வாதிகாரம் ஒழிக’ என்ற முழக்கங்களை எழுப்பியபடி, கையில் வைத்திருந்த மஞ்சள் நிறப் புகைக் குண்டுகளை அவையில் வீசினர். அவர்களை மடக்கிப் பிடித்த எம்.பி.க்கள் அவைக் காவலர்களிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.