முகப்பு
தமிழ்நாடு

பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

சீரமைக்கப்பட்ட, புனரமைக்கப்பட்ட புதிய கட்டடங்களை புதன்கிழமை காணொளி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

Updated On : 28 ஜூன் 2023, 11:55 am IST
பகிர்:


சென்னை: சீரமைக்கப்பட்ட, புனரமைக்கப்பட்ட புதிய கட்டடங்களை புதன்கிழமை காணொளி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு கடனுதவிகளை வழங்கினார்.

சென்னை, தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை காலை 10 மணியளவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சீரமைக்கப்பட்ட, புனரமைக்கப்பட்ட புதிய கட்டடங்களை திறந்து வைத்தும் மற்றும் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை காணொளி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் புனரமைக்கப்பட்ட பூமாலை வணிக வளாகங்களை திறந்து வைத்து, வாழ்ந்துக் காட்டுவோம் திட்டத்தின் கீழ் நுண் தொழில் நிறுவன நிதித் திட்டத்தை தொடங்கி வைத்து, மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு கடனுதவிகளை வழங்கினார்.

Advertisement

Advertisement

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் திருவள்ளூர், கடலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் சீரமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரங்கள், கடலூர், திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகக் கட்டடங்கள் மற்றும் புதிய பேருந்து நிலையம், ஆகியவற்றை திறந்து வைத்தார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள், துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள், முதன்மைப் பதப்படுத்தும் மையங்கள், சேமிப்புக் கிடங்குகள், சேமிப்பு வசதியுடன் கூடிய துணை ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கான கல்விசார் கட்டடங்கள், ஆகியவற்றை திறந்து வைத்தார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் பனையின் சிறப்பினை பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள "நெட்டே , நெட்டே பனைமரமே" என்ற காலப்பேழை புத்தகத்தை வெளியிட்டார். 

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் விவசாய பெருமக்கள் தங்கள் நிலத்தில் உள்ள மண் வளத்தினை அறிந்து, அதற்கேற்ப உரமிடுவதை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள "தமிழ் மண்வளம்" எனும் புதிய இணைய முகப்பினை (http://tnagriculture.in/mannvalam) தொடங்கி வைத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.