தலைவர்கள் வாழ்ந்த இல்லங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும்: வெ.இறையன்பு வலியுறுத்தல்
நினைவகங்கள், தலைவா்களின் இல்லங்களை பொதுமக்கள் அதிக அளவில் பாா்வையிட்டுச் செல்லும் வகையில் பயன்படுத்த வேண்டும்
சென்னை: நினைவகங்கள், தலைவா்களின் இல்லங்களை பொதுமக்கள் அதிக அளவில் பாா்வையிட்டுச் செல்லும் வகையில் பயன்படுத்த வேண்டும் என்றும் தலைவர்கள் வாழ்ந்த இல்லங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும்மென்று பொதுப்பணித் துறை அலுவலர்களை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கேட்டுக்கொண்டார்.
செய்தித் துறையின் நினைவகங்கள் மற்றும் தலைவர்களின் இல்லங்களை தலைமைச் செயலாளர் முனைவர்.வெ.இறையன்பு ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
செய்தித் துறையின் கீழ் உள்ள சென்னை காந்தி மண்டபம் வளாகத்தில் அமைந்துள்ள ராஜாஜி நினைவிடம், காந்தி அருங்காட்சியகம் மற்றும் சிறையில் வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கு பொலிவுட்டப் பட்டதையும், மார்பளவுச் சிலையையும் பார்வையிட்டார்.
Advertisement
Advertisement
தொடர்ந்து சுதந்திரப் போரட்ட வீரர்கள் அரங்கம், தமிழ்மொழித் தியாகிகள் அரங்கம், பெரியவர் எம்.பக்தவச்சலம் நினைவிடம், இரட்டைமலை சீனிவாசன் நினைவிடம், பெருந்தலைவர் காமராஜர் நினைவிடம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் ரூ.2.48 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் அயோத்திதாச பண்டிதர் நினைவு மண்டப கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். காந்தி மண்டப வளாகத்தில் அதிக அளவில் நமது மண்ணிற்கேற்ற நாட்டு மரக் கன்றுகளை நடவு செய்யுமாறு அறிவுத்தினார்.
பின்னர் பெருந்தலைவர் காமராஜர் நினைவு இல்லம், கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் மணிமண்டபம், திருவல்லிக்கேணியில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லம் மற்றும் ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபம் ஆகியவற்றை பார்வையிட்டு அரங்கங்கள் மற்றும் மணிமண்டபங்களை பொது மக்கள் அதிக அளவில் பார்வையிட்டு செல்லும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றியடைய பாடுபடும் மாணவ மாணவியர்கள் இதுபோன்ற அரங்கங்கள் மற்றும் மணிமண்டபங்களை பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யவும் செய்தித் துறை அலுவலர்களை கேட்டுக்கொண்டார். தலைவர்கள் வாழ்ந்த இல்லங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும்மென்றும் பொதுப்பணித் துறை அலுவலர்களை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின் போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மரு.இரா.செல்வராஜ், கூடுதல் இயக்குநர் (செய்தி) சிவ.சு.சரவணன், இணை இயக்குநர் (நினைவகங்கள்) கு.தமிழ்செல்வராஜன், முதன்மை தலைமை பொறியாளர் (கட்டடம்) கே.பி.சத்தியமூர்த்தி, தலைமை பொறியாளர் (சென்னை மண்டலம்) கே.ஆயத்தரசு ராஜசேகரன், செயற்பொறியாளர் இ.ஜெயக்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.