FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஆருத்ரா மோசடி வழக்கு: விசாரணைக்காக நடிகர் ஆர்.கே.சுரேஷ் சென்னை வருகை

துபையிலிருந்து சென்னை திரும்பிய நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் குடியுரிமைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். 

Updated On : 10 டிசம்பர் 2023, 1:13 pm IST
பகிர்:

துபையிலிருந்து சென்னை திரும்பிய நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் குடியுரிமைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். 

ஆர்.கே.சுரேஷ் மீது ஏற்கெனவே லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்த நிலையல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நீதிமன்றம் உத்தரப்படி போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வந்ததாக தெரிவித்ததால் ஆர்.கே.சுரேஷ் விடுவிக்கப்பட்டார். ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் டிச.12ல் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு ஆருத்ரா கோல்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. முதலீடுகளுக்கு 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமாா் 1 லட்சம் முதலீட்டாளா்களிடமிருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகாா் எழுந்தது. இதனடிப்படையில் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநா்கள் உள்பட 21 போ் மீது வழக்குப் பதிவு செய்தது.

Advertisement

Advertisement

இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், நடிகா், தயாரிப்பாளா் மற்றும் பாஜக ஓபிசி பிரிவு துணை தலைவரான ஆா்.கே.சுரேஷுக்கு ஆருத்ரா மோசடியில் தொடா்புள்ளது தெரியவந்தது. அதனடிப்படையில் போலீஸ் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராக ஆா்.கே.சுரேஷுக்கு பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி ஆா்.கே.சுரேஷ் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இதனிடையே, ஆா்.கே.சுரேஷுக்கு எதிராக சென்னை மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பித்தனா். இந்த நோட்டீஸை திரும்பப் பெற பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிடக்கோரி ஆா். கே. சுரேஷ் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், படத் தயாரிப்பு தொடா்பாகவே ரூசோ என்னை அணுகினாா். அதுதொடா்பாக மட்டுமே பணப்பரிவா்த்தனை நடந்தது. ஆருத்ரா மோசடிக்கும் எனக்கும் தொடா்பில்லை. மேலும், மனைவி மற்றும் குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக தற்போது துபையில் உள்ளேன். நாடு திரும்பினால் கைது செய்யும் வகையில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை திரும்ப பெற உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆா்.கே.சுரேஷ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எஸ்.வீரராகவன், வரும் டிச. 10-ஆம் தேதி ஆா்.கே. சுரேஷ் நாடு திரும்பவுள்ளதாக கூறினாா். இது தொடா்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தாா். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments