சென்னை ஆவின் பால் வினியோகம் பாதிப்பு: பொதுமக்கள் அவதி
சென்னையில் ஆவின் பால் வினியோகம் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
சென்னை: சென்னையில் ஆவின் பால் வினியோகம் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
சென்னையில் ஆவின் நிறுவனம் மூலம் தினசரி 14 லட்சம் லிட்டா் பால் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதால், சென்னை மாதவரம், சோழிங்கநல்லூா், அம்பத்தூா் பால் பண்ணைகளுக்கு பால் வரத்து குறைந்துள்ளது. இதனால், ஆவின் பால் வினியோகமும் கடந்த சில நாள்களாக குறைந்து வந்த நிலையில் சீரானது.
இந்நிலையில், சென்னை அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் வெள்ளிக்கிழமை பால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் அண்ணா நகர், அமைந்தகரை, அரும்பாக்கம், முகப்பேர், நெற்குன்றம், மதுரவாய்ல், கோயம்பேடு, வளசரவாக்கம், போரூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு வரவேண்டிய பால், காலை 9 மணி வரை வரவில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் நுகா்வோா் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement
ஆவின் பால் கிடைக்காத நிலையில் தனியார் பாலை வாங்கிச் சென்றனர்.
பால் வரத்து குறைவு, ஒப்பந்த தொழிலாளா்கள் வருகை குறைவு காரணமாக பால் பாக்கெட் உற்பத்தி மற்றும் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பால் வினியோகம் தடையின்றி நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஆவின் அதிகாரிகள் கூறுகின்றனர்.
பால்வரத்து குறைவு, தொழிலாளர்கள் பிரச்னைக்கு அரசு விரைவில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என பால் முகவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.