முகப்பு
தமிழ்நாடு

குடியை மறந்து முதலாம் ஆண்டு: போஸ்டர் ஒட்டிக் கொண்டாடியவர்

செங்கல்பட்டைச் சேர்ந்த ஒருவர், தான் குடியை மறந்து வாழத் தொடங்கியதன் முதலாம் ஆண்டு நிறைவை போஸ்டர் ஒட்டிக் கொண்டாடியுள்ளார்.

Updated On : 1 மார்ச் 2023, 2:53 pm IST
பகிர்:

சென்னை: வழக்கமாக அரசியல் பிரமுகர்களின் பிறந்தநாள், சினிமா விளம்பரம், வெற்றி விழா போன்றவற்றுக்குத்தான் போஸ்டர் ஒட்டுவார்கள். ஆனால் செங்கல்பட்டைச் சேர்ந்த ஒருவர், தான் குடியை மறந்து வாழத் தொடங்கியதன் முதலாம் ஆண்டு நிறைவை போஸ்டர் ஒட்டிக் கொண்டாடியுள்ளார்.

சுமார் 50 வயது மதிக்கத்தக்க மனோகரன் என்பவர், தனது 20 வயது முதல் அதாவது கடந்த 30 ஆண்டுகளாக குடிக்கு அடிமையாகி வாழ்வை தொலைத்துள்ளார்.

தனது பெரும்பாலான வாழ்க்கையை குடிக்கு அடிமையாகவே செலவிட்ட மனோகரன், கடந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் குடியிலிருந்து விடுபட விரும்பி, குடிப்பதை நிறுத்தியிருக்கிறார். ஆரம்பத்தில் அது முடியவே முடியாது என்றுதான் நினைத்திருக்கிறார். ஆனால், அவரது வைராக்கியம் அவரை அதைச் செய்து முடிக்க வைத்திருக்கிறது.

Advertisement

உடல்நிலையும், உறவுகளின் அன்பும் குடியை மறந்தபிறகு அதிகரித்ததாகவும், ஒரு நாளைக்கு 300 முதல் 400 ரூபாய் குடிக்காகவே செலவிட்டதாகவும், ஒரு கட்டத்தில் அதுவே எனக்கு எமனாக மாறியதை உணர்ந்த பிறகு, அதிலிருந்து விடுபட விரும்பியதாகக் கூறுகிறார்.

ஆரம்பத்தில் உறவினர்களைப் போலவே நானும் என்னை நம்பவில்லை. குடியை விடப்போகிறேன் என்று சொன்ன போது. ஆனால் அது நடந்துவிட்டது. என்னைப் போல பலரும் மாற வேண்டும் என்பதற்காகவே இந்த போஸ்டர் அடித்து பல இடங்களில் ஒட்டியிருக்கிறேன். இது எனக்காக ஒட்டப்பட்டது அல்ல. என்னைப் போன்று குடிக்கு அடிமையானவர்களுக்காக ஒட்டப்பட்டது என்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.