முகப்பு
தமிழ்நாடு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் கோபுரங்களுக்கு பாலாலயம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் கோபுரங்களுக்கு குடமுழுக்கு நடைபெற உள்ளதை அடுத்து, முதல் கட்டமாக பாலாலய பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 4 செப்டம்பர் 2023, 11:50 am IST
பகிர்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் கோபுரங்களுக்கு குடமுழுக்கு நடைபெற உள்ளதை அடுத்து, முதல் கட்டமாக பாலாலய பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறைக்குள்பட்ட கோயில்களில் ஆகம விதிப்படி 12 ஆண்டுக்கொருமுறை குடமுழுக்கு நடத்த வேண்டும். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கடந்த 08.04.2009-இல் குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கு நடந்து  12 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால் குடமுழுக்கு நடத்த இந்துசமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.  

திருப்பணிகள் மேற்கொள்ளும் வகையில் முதல் கட்டமாக கோயிலின் கிழக்கு ராஜகோபுரம், மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய மூன்று 9 நிலை கோபுரங்கள், அம்மன் ஏழுநிலை கோபுரம் ஆகிய 5 கோபுரங்களுக்கு பாலாலய பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

இப்பூஜை ஞாயிற்றுக்கிழமை காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மஹாகணபதி ஹோமத்துடன் தொடங்கியது. மாலையில் முதல்கால யாகபூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, திங்கள்கிழமை காலை 7.15 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்று, தீபாராதனைக்குப்பின் கலசங்கள் புறப்பாடாகி கிழக்கு ராஜகோபுரம் உள்பட 5 கோபுரங்களுக்கு பாலாலய பூஜை நடைபெற்றது.

இவ்விழாவில், வணிக வரி, பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா, சட்டப் பேரவை உறுப்பினர்கள் கோ.தளபதி, மு.பூமிநாதன்,மதுரை மாநகராட்சி மேயர் வ.இந்திராணி, இந்து சமய அறநிலையத் துறை மதுரை மண்டல இணை ஆணையர் க.செல்லத்துரை, கோயில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன் உள்பட அலுவலர்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.