FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு மிக்ஜம் புயல் நிவாரண நிதியாக ரூ.115.49 கோடி மத்திய அரசு சனிக்கிழமை விடுவித்துள்ளது.

Updated On : 27 ஏப்ரல் 2024, 1:29 pm IST
பகிர்:

தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு மிக்ஜம் புயல் நிவாரண நிதியாக ரூ.115.49 கோடியும், கடந்தாண்டு டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணமாக ரூ.160.61 கோடி மத்திய அரசு சனிக்கிழமை விடுவித்துள்ளது.

மிக்ஜம் புயலால் ஏற்பட்ட கடுமையான மழைப்பொழிவின் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து, வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்பிற்குள்ளானது.

முதல்வர் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளின் காரணமாக, பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் மிக விரைவாக இயல்பு நிலை திரும்பியது.

Advertisement

Advertisement

முதல்வர் 5.12.2023 அன்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், மிக்ஜம் புயலின் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கவும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், தமிழ்நாட்டிற்கு உடனடியாக ரூ.5,060 கோடி நிதியை விடுவிக்குமாறும் கோரியிருந்தார். அதைத் தொடர்ந்து, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 7.12.2023 அன்று சென்னை வருகை தந்து, ‘மிக்ஜம்’ புயல் பெருமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், முதல்வருடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். முதல்வர், மிக்ஜம் புயலின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைத் தெரிவித்து இடைக்கால நிதி உதவி கோரும் கோரிக்கை மனுவினை அளித்து, தமிழ்நாட்டிற்கு உடனடியாக நிதியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட வந்த மத்திய அரசின் பல்துறை ஆய்வுக் குழு,மிக்ஜம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் டிசம்பர் 14 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் மிக்ஜம் புயல் நிரந்தர நிவாரணத் தொகையாக ரூ. 12,659 கோடியும் தற்காலிக நிவாரணத் தொகையாக ரூ.7,033 கோடியும் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 24 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் மாநில அரசு கணக்கு ரிசர்வ் வங்கி உடனடியாக நிதியை விடுவிக்க மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், மிக்ஜம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து முதல் கட்டமாக மிக்ஜம் புயல் நிவாரண நிதியாக ரூ.115.49 கோடியும், கடந்தாண்டு டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணமாக ரூ.160.61 கோடி மத்திய அரசு சனிக்கிழமை விடுவித்துள்ளது.

முன்னதாக மிக்ஜம் புயல் பாதிப்பிற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.285 கோடி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், அதில் ரூ.115 கோடியே 49 லட்சத்தை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதேபோன்று வெள்ள பாதிப்பிற்கு ரூ.397 கோடி ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், ரூ.160 கோடியே 61 லட்சம் விடுவித்துள்ளது.

இதன் மூலம் மிக்ஜம் மற்றும் வெள்ள பாதிப்பிற்காக தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.276 கோடியே 10 லட்சத்தை விடுத்துள்ளது. மொத்தம் 682 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் நடைபெற்றும் வரும் கர்நாடகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.3,498 கோடி மத்திய அரசு விடுவித்துள்ளது.

கர்நாடகத்துக்கு வறட்சி நிவாரண நிதி வழங்கக்கோரி சமீபத்தில் அந்த மாநில முதல்வர் சித்தராமையா போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments