விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கோரி விழுப்புரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாநாட்டுக்கு அனுமதி கேட்டும், பாதுகாப்பு வழங்கக் கோரியும் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் மனு அளித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் கடந்த வாரம் கட்சியின் கொடியை அறிமுகம் செய்துவைத்தார்.
கொடி சிவப்பு, மஞ்சள் என இரு வண்ணங்கள் மத்தியில் 2 போர் யானைகள் வாகை மலருடன் வடிவமைக்கப்பட்டுள்ள கொடியும், கொடிப் பாடலும் விஜய்யின் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
அடுத்த கட்டமாக விழுப்புரம் மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் மாநில அளவிலான கட்சியின் முதல் மாநாட்டை மிக பிரம்மாண்டமாக நடத்த நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து, செப்டம்பர் 23ஆம் தேதி மாநாடு நடத்துவதற்கான அனுமதி கேட்டு கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புதன்கிழமை கடிதம் வழங்கியுள்ளார்.
மேலும், விக்கிரவாண்டி அடுத்த வி. சாலை கிராமத்தில் மாநாடு நடத்துவதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாகவும், இந்த மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய் கலந்து கொள்ளவுள்ளதால் பாதுகாப்பு வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக் கொண்ட கூடுதல் எஸ்.பி. திருமால், இது குறித்து உயர் அலுவலர்கள் கவனத்துக்கு கொண்டு செல்வதாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புஸ்ஸி ஆனந்த், மாநாடு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த அனைத்து தகவல்களையும் கட்சித் தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.