சவுக்கு சங்கர் மீண்டும் கைது!
சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி...
யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பகுதியில் சவுக்கு சங்கர் தங்கியிருந்தபோது அவரது காரில் இருந்தும் அவரது உதவியாளரிடம் இருந்தும் தடை செய்யப்பட்ட 2.6 கிலோ கஞ்சா வகை போதைப் பொருள் போலீசாரால் கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் ராம்பிரபு, ராஜரத்தினமிடம் கஞ்சா கொடுத்ததாக மகேந்திரன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிக்க : கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்ட ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா!
இந்த வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
கடந்த ஜூலை மாதம் சவுக்கு சங்கர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது சம்மன் அனுப்பியும் சவுக்கு சங்கர் தொடர்ச்சியாக ஆஜராகாதது குறித்து அவரது வழக்கறிஞர் மனு அளித்தார்.
அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிபதி செங்கமலச் செல்வன், சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கின் விசாரணையை 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை தி.நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து தேனாம்பேட்டை போலீசார் சவுக்கு சங்கரை அதிரடியாக கைது செய்து தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து தேனி பழனி செட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேனியில் இருந்து காவலர்கள் சென்னைக்கு விரைந்துள்ளனர்.