பொள்ளாச்சி: தொடர்மழையால் கோழிப்பண்ணை சுவர் இடிந்ததில் இருவர் பலி!
பொள்ளாச்சி: கனமழையால் கோழிப்பண்ணை சுவர் இடிந்ததில் இருவர் பலி - மூவர் கவலைக்கிடம்
கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பலத்த காற்றுடன் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள செங்கம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள கோழிப்பண்ணையின் சுவர் இடிந்து விழுந்ததில் வடமாநில தொழிலாளர்கள் உள்பட 5 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
சனிக்கிழமை (ஜூலை 20) பிற்பகல் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. சிமெண்ட் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கட்டடத்தில் தொடர்மழையால் ஈரம் பரவி சுவர்கள் நனைந்திருந்த நிலையில், பலத்த காற்று வீசியதில் கண்ணிமைக்கும் நேரத்தில் சுவர் இடிந்து விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
அப்போது கோழிப்பண்ணை உரிமையாளரும் 4 பெண் தொழிலாளர்களும் உள்ளே சிக்கிக் கொண்டனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்திலிருந்தவர்கள், உடனடியாகச் சென்று இடிபாடுகளை அகற்றி உள்ளே இருந்த 5 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
எனினும், மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்த பண்ணை உரிமையாளரும், வட மாநில பெண் தொழிலாளி ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்டுள்ள மூவருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்திர்கு சென்று ஆய்வு செய்துள்ள காவல்துறை அதிகாரிகள் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.