தஞ்சையில் நள்ளிரவில் வக்கீல் குமாஸ்தா வெட்டிக் கொலை!
தஞ்சையில் நள்ளிரவில் வக்கீல் குமாஸ்தா வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் வடக்குவாசல் சிரேஸ் சத்திரம் சாலையைச் சேர்ந்தவர் அற்புதம் (70). இவர் வக்கீல் குமாஸ்தாவாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று(மே 20) இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது, வீட்டிற்கு வந்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் வெட்டியுள்ளது. இதையடுத்து மர்ம கும்பலிடம் இருந்து தப்பிய அற்புதம் வடக்கு வாசல் நான்கு ரோட்டை நோக்கி ஓடியுள்ளார்.
வீட்டில் இருந்து அவர் தப்பித்து ஓடிய போதும், அவரை விடாமல் மர்ம நபர்கள் துரத்தி சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனைப் பார்த்த அற்புதத்தின் மனைவியும் சுபாங்கினி (65) பின்னாடி ஓடி மர்ம நபர்களை தடுத்துள்ளார்.
Advertisement
இதில், அவரையையும் மர்ம கும்பல் வெட்டியுள்ளது. பின்னர், மர்ம நபர்கள் அற்புதத்தை நடுரோட்டில் வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து, தகவல் அறிந்ததும் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், நகர துணை போலிஸ் சூப்பரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மேலும் காயமடைந்த சுபாங்கினியை காப்பாற்றி சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த அற்புதத்தின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து தஞ்சை மேற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து இந்த கொலை சம்பவம் எதற்காக நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.