முகப்பு
தமிழ்நாடு

திருவொற்றியூர் பள்ளியில் 35 மாணவர்கள் மயக்கம்! வாயு கசிவுதான் காரணமா?

திருவொற்றியூர் பள்ளியில் வாயு கசிவால் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மயக்கமடைந்துள்ளனர்.

Updated On : 26 அக்டோபர், 2024 at 8:08 AM
பகிர்:

திருவொற்றியூர் பள்ளியில் வாயு கசிவால் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மயக்கமடைந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவொற்றியூர் விக்டரி மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வகத்தில் கடந்த 2, 3 நாள்களாக வாயு கசிவு இருந்துள்ளது. மாணவிகள் இதுகுறித்து ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகமும் இதனைக் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.

நேற்று(வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1 மணியளவில் மாணவ, மாணவிகளுக்கு திடீரென கண் எரிச்சல், மூச்சுவிடுவதில் சிரமம், வாந்தி, தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. வெந்நீர் குடிக்கும்படி ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால், அடுத்த ஓரிரு மணி நேரங்களில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் மயக்கம் அடைந்துள்ளனர்.

உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவர்கள் வந்து மாணவர்களை வெளியேற்றி அவர்களை தேரடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். மாலை 4 மணி வரை பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் தகவலறிந்து மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். தீவிர பாதிப்படைந்த மாணவி ஒருவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

15-க்கும் மேற்பட்ட மாணவிகள் வீடு திரும்பிய நிலையில் 20 மாணவ, மாணவிகள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கட்டடத்தில் இடது புறத்தில் ஆய்வகம் அமைந்துள்ளது. பள்ளி வகுப்பறைகளுக்கு எதிரே ஆய்வகம் அமைந்துள்ளதால் மாணவ, மாணவிகள் மயக்கத்திற்கு வாயு கசிவு காரணமாக இருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். எனினும் இதுகுறித்த விசாரணை தொடர்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.