மலையேற்றம் மேற்கொள்வோர் கவனத்துக்கு... 23 வழித்தடங்கள் திறப்பு!
23 மலையேற்ற வழித்தடங்கள் திறப்பு தொடர்பாக....
தமிழ்நாட்டில் மலையேற்றத்திற்காக இன்றுமுதல்(ஏப். 16 ) 40 மலையேற்ற வழித்தடங்களில் 23 வழித்தடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு தமிழ்நாடு வனத்துறை மூலம் இயற்கையைப் போற்றுவதை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு மலையேற்ற திட்டம்
(Trek Tamil Nadu) தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினால் 24.10.2024 தொடங்கி வைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இத்திட்டத்தின் முதல் கட்டமாக 40 அழகிய, மலையேற்ற வழித்தடங்கள் தொடங்கி வைக்கப்பட்டது. இத்துடன் இணையவழி முன்பதிவிற்கான வலைதளமும் www.trektamilnadu.com- ம் தொடங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டம் தமிழ்நாட்டின் வனம் மற்றும் வன உயிரினப் பகுதிகளில் நிலையான முறையில் மலையேற்றம் மேற்கொள்வதை ஒரு குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பழங்குடியினர் / வனப் பகுதிகளை ஒட்டியுள்ளமக்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் நிலையான வருமானம் ஈட்டவும், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் இம்முன்னெடுப்பின் மூலமாக மலையேற்ற வழிகாட்டி பயிற்சிகள் வழங்கப்பட்டு வழிகாட்டிகளாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, உள்ளூர் சமூகங்களைச் சேர்ந்த பயிற்சி பெற்ற 200 நபர்கள் மலையேற்ற வழிகாட்டிகளாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மலையேற்றம் மேற்கொள்பவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அனைத்து பாதைகளும் சூழல் நிலைக்கேற்ப கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வனத்தீ பருவகாலத்திற்கு பின்னர் மலையேற்றங்கள் மீண்டும் தொடங்கப்படுகிறது.
தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினப்பகுதிகள் (மலையேற்றத்தை ஒழுங்குபடுத்துதல்) விதிகள், 2018 இன் படி, வனப்பகுதிகளில் ஏற்படும் தீ மீதான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் மலையேற்ற நடவடிக்கைகள் ஆண்டுதோறும் பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 15 வரைநிறுத்தி வைக்கப்படுகின்றன.
வனத்தீ பருவகாலம் முடிவுறும் நிலையில், ஏப்ரல் 16 முதல் மலையேற்றத்திற்காக 40 மலையேற்ற வழித்தடங்களில் 23 வழித்தடங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.
இத்தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைகள், எளிதானது முதல் மிதமான சிரமம் கொண்டவைகளாக முதன்மைபடுத்தப்பட்டு, அனைத்து வயதினருக்கும் ஏற்றவாறு பாதுகாப்பான, இனிமையான மற்றும் கல்வி சார்ந்த அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் கவனமுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஐ-போன்களுக்கு இந்தியாவில் வரவேற்பு கிடைப்பது ஏன்?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.