முகப்பு
தமிழ்நாடு

போதை மருந்து புழக்கத்தை தடுக்க பறக்கும் படைகள்: பேரவையில் அறிவிப்பு

போதை மருந்து நடமாட்டத்தை கண்காணிக்க பறக்கும் படைகள் - பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

Updated On : 21 ஏப்ரல் 2025, 7:18 pm IST
அமைச்சர் மா. சுப்பிரமணியன்
பகிர்:

சென்னை: போதை மருந்து புழக்கத்தை கண்காணிக்க மருந்து ஆய்வாளர்களைக் கொண்ட பறக்கும் படைகள் உருவாக்கப்படும் என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேரவையில் அறிவித்துள்ளார்.

மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, சட்டப் பேரவை திங்கள்கிழமை (ஏப்.21) மீண்டும் கூடியது. இன்று பேரவையில், மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கைகள் மீது நடைபெற்ற விவாதங்களுக்கு அந்தத் துறையின் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில் முக்கிய அறிவிப்பாக, போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதை தடுக்கவும், போதை மருந்து புழக்கத்தை கண்காணிக்கவும் தமிழகம் முழுவதும் மருந்து ஆய்வாளர்களைக் கொண்ட பறக்கும் படைகள் உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் புதிதாக 25 போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தமிழகத்தில் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் பேரவையில் இன்று அமைச்சர் அறிவித்துள்ளார். அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் கட்டணமின்றி எச்.ஐ.வி/எய்ட்ஸ் தடுப்புப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சையளிக்க நடவடிக்கை.

டயாலிசிஸ் சிகிச்சைக்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் புரதச்சத்து நிறைந்த உணவு வழங்கப்படும்.

கோவையில் ரூ.29.67 கோடியில் மருத்துவ சாதனங்கள் சோதனைக் கூடம் நிறுவப்படும்.  

4-ஆவது பொது சுகாதார சர்வதேச மாநாடு சேலத்தில் நடத்தப்படும்.

பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பதை உறுதி செய்ய 6 அரசு மருத்துவமனைகளில் பாலூட்டும் மேலாண்மை அலகு நிறுவப்படும்.

மக்கள் தொகைக்கேற்ப கிராமங்களிலும் நகரங்களிலும் 642 புதிய துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும். தமிழகத்தில் ரூ.137 கோடியில் 300 துணை சுகாதார நிலைய கட்டடங்கள் கட்டப்படும் ஆகிய பல்வேறு அறிவிப்புகள் மக்கள் நல்வாழ்வுத் துறை தரப்பிலிருந்து இன்று வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.