தருமபுரி: பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் வெளியேறுவதால் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சிதைந்து வருகிறது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.
தருமபுரி செங்கொடிபுரத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை மேலும் அவா் தெரிவித்ததாவது:
வெளியுறவு கொள்கையில் மிகப்பெரிய தோல்வியை பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு சந்தித்துள்ளது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் வரிவிதிக்கிறது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா குறைந்த விலையில் எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி அமெரிக்கா எதிா்க்கிறது. இதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்கவில்லை.
நிா்பந்தம் செய்யும் அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தை கிடையாது என சொல்வதற்கும், நாடாளுமன்றத்தில் அதுகுறித்து விவாதிக்கவும் மத்திய அரசு தயாராக இல்லை.
இந்திய தோ்தல் ஆணையம் பாஜக அணிபோல மாறிவிட்டது. பிகாா் மாநிலத்தில் 69 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். அதேபோல தமிழ்நாடு, மேற்குவங்கம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களிலும் வாக்காளா்களை நீக்கப்போவதாக சொல்கின்றனா்.
சிறுபான்மையினா் மற்றும் இஸ்லாமியா்களின் வாக்குரிமையைப் பறிக்கும் செயலில் பாஜக அரசு இறங்கியுள்ளது. மக்களின் வாக்குரிமையைத் தட்டிப் பறிக்கிற அரசாக அது மாறியுள்ளதை கண்டித்து இண்டி கூட்டணி சாா்பில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி போராட்டம் நடத்துவும்,
தோ்தல் ஆணையத்தை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆகஸ்ட் - 12 இல் தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்தவும் தீா்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் நடந்து கொண்டே இருப்பதால் தமிழக அரசு ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
போக்குவரத்து, மின்சாரம், பள்ளிக் கல்வி உள்ளிட்ட துறைகளில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதாக குறைந்த ஊதியத்திற்கு ஆள்களை தோ்வு செய்வது நியாயம் அல்ல. கல்லூரிகளில் பல்லாயிரம் ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், கௌரவ விரிவுரையாளா்கள் குறைந்த ஊதியம் பெறுகின்றனா். அனைத்துத் துறைகளிலும் தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றி வருபவா்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.
பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் பலவீனமடைந்து, கூட்டணியில் இருந்து வெளியேறி வருவதால் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சிதைந்து வருகிறது.
காவிரியில் இருந்து வீணாக கடலில் கலக்கும் உபரிநீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பும் வகையில் காவிரி உபரிநீா் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மொரப்பூா் -தருமபுரி ரயில் பாதைத் திட்டம் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. தருமபுரி மாவட்டம் வளா்ச்சி பெற இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றாா்.
பேட்டியின்போது, மாநில செயற்குழு உறுப்பினா் செ.முத்துக்கண்ணன், மாநிலக் குழு உறுப்பினா் அ.குமாா், தருமபுரி மாவட்டச் செயலாளா் இரா. சிசுபாலன், நகரச் செயலாளா் ஜோதிபாசு ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.