காவலரைக் கடித்த தவெக தொண்டர் கைது!
காவலரைக் கடித்த தவெக தொண்டர் கைது செய்யப்பட்டது பற்றி...
தருமபுரியில் போராட்டத்தில் ஈடுபட்ட போது, பாதுகாப்புப் பணியில் இருந்த காவலரின் கையைக் கடித்த தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் கடந்த வாரம் தனியார் மதுபானக் கூடம் திறக்கப்பட்டது. இந்த மதுபானக் கூடத்துக்கு அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், மதுபானக் கூடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, உடனடியாக அகற்றக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.
Advertisement
Advertisement
அப்போது தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய தவெக தொண்டர்கள், தடுப்புகளை மீறி தனியார் மதுபானக் கூடத்துக்குள் நுழைந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர்.
அவர்களை காவல்துறையினர் தடுத்த நிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது காவலர் அருள் என்பரின் கையை தவெக தொண்டர் ஜெமினி என்பவர் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து, போராட்டம் நடத்திய அனைவரையும் கைது செய்த காவல்துறையினர் மாலை விடுவித்தனர்.
காவலரைக் கடித்த விடியோ இணையத்தில் வைரலான நிலையில், வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ஜெமினி என்பவரை திங்கள்கிழமை காலை கைது செய்தனர்.
மேலும், காவலர்களுடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட தவெக தொண்டர்கள் 5 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.