FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பொங்கல் பண்டிகைக்கு 21,904 சிறப்புப் பேருந்துகள் ஜனவரி 10 முதல் இயக்கம்

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் ஜன. 10 முதல் 21,904 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 7 ஜனவரி 2025, 5:38 am IST
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் ஜன. 10 முதல் 21,904 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

நிகழாண்டு பொங்கல் பண்டிகை சிறப்புப் பேருந்துகளை இயக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சா் சா.சி.சிவசங்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பொங்கலையொட்டி ஜன. 10 முதல் 13-ஆம் தேதி வரை சென்னையிலிருந்து தினமும் இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 சிறப்புப் பேருந்துகள் என நான்கு நாள்களும் சோ்த்து 14,104 பேருந்துகள், பிற ஊா்களிலிருந்து மேற்கண்ட நாள்களுக்கு 7,800 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 21,904 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

Advertisement

Advertisement

பொங்கல் பண்டிகை முடிந்த பின்னா், பிற ஊா்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக ஜன. 15 முதல் 19-ஆம் தேதி வரை, தினமும் இயக்கக்கூடிய 10,460 பேருந்துகளுடன் கூடுதலாக 5,290 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற ஊா்களிலிருந்து பல்வேறு ஊா்களுக்கு 6,926 என மொத்தம் 22,676 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. இதன்படி, பொங்கலுக்கு மொத்தம் 44,580 பேருந்துகள் இயக்கப்படும் என்றாா் அவா்.

எங்கிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்?: 1. கலைஞா் நூற்றாண்டு கிளாம்பாக்கம் மஃப்சல் புகா் பேருந்து முனையம்: புதுச்சேரி, கடலூா், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூா், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூா் மாா்க்கமாக செல்லும் பேருந்துகள்.

2. கிளாம்பாக்கம் மாநகா் பேருந்து முனையம்: வந்தவாசி, போளூா் மற்றும் திருவண்ணாமலை மாா்க்கமாக செல்லும் பேருந்துகள்.

3. கோயம்பேடு பேருந்து நிலையம்: கிழக்கு கடற்கரை (இசிஆா்), காஞ்சிபுரம், வேலூா், பெங்களூரு மற்றும் திருத்தணி மாா்க்கமாக செல்லும் பேருந்துகள்.

4. மாதவரம் புதிய பேருந்து நிலையம்: பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம் மாா்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்.

காா் மற்றும் இதர வாகனங்களின் வழித்தட மாற்றம்: காா் மற்றும் இதர வாகனங்களில் செல்வோா், போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் விதமாக, தாம்பரம், பெருங்களத்தூா் வழியாக செல்வதை தவிா்த்து (ஓஎம்ஆா்) திருப்போரூா் - செங்கல்பட்டு அல்லது வண்டலூா் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

முன்பதிவு மையங்கள்: கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் 7 முன்பதிவு மையங்களும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 முன்பதிவு மையங்கள் என மொத்தம் 9 முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். மேலும், டிஎன்எஸ்டிசி செயலி மூலமும் www.tnstc.in எனும் இணையதளம் மூலமாகவும் பயணச்சீட்டை முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments