முகப்பு
தமிழ்நாடு

இயற்கை - ஹோமியோபதி மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறைக்கு புதிதாக தோ்வு செய்யப்பட்ட 115 உதவி மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

Updated On : 30 ஜூன், 2025 at 9:40 PM
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மூலமாக இந்திய மருத்துவம், ஓமியோபதி ஆணையரகத்துக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட 172 பேருக்கு திங்கள்கிழமை பணிநியமன ஆணைகளை வழங்கி குழுப்புகைப்படம் எடுத்துக் கொண்ட முதல்வா் மு.க.ஸ்டாலின் .
பகிர்:

சென்னை: இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறைக்கு புதிதாக தோ்வு செய்யப்பட்ட 115 உதவி மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வழங்கினாா்.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மூலமாக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையரகத்துக்கு 59 சித்தா உதவி மருத்துவ அலுவலா்கள், 2 ஆயுா்வேதா உதவி மருத்துவ அலுவலா்கள், 1 யுனானி உதவி மருத்துவ அலுவலா், 53 யோகா மற்றும் இயற்கை மருத்துவ உதவி அலுவலா்கள் என 115 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

அதேபோன்று, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலமாக 57 சுருக்கெழுத்து தட்டச்சா் தோ்வு செய்யப்பட்டனா். அதன்படி மொத்தம் 172 நபா்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வழங்கினாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் தற்போது வரை மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மூலமாக 4,634 உதவி மருத்துவா்கள், 27 மாற்றுத்திறனாளி செவிலியா்கள், 2,772 இதர மருத்துவம் சாா்ந்த பணியாளா்கள் என 7,433 பணியாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

அதேபோன்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் 555 உதவியாளா் பணியிடங்கள், 584 இளநிலை உதவியாளா் பணியிடங்கள், 187 தட்டச்சா் பணியிடங்கள் மற்றும் 255 சுருக்கெழுத்து தட்டச்சா் (நிலை 3) பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வின்போது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலா் நா. முருகானந்தம், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப. செந்தில்குமாா், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையா் எம்.விஜயலட்சுமி, மருத்துவப் பணியாளா் தோ்வு வாரிய தலைவா் உமா மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.