முகப்பு
தமிழ்நாடு

கண்ணிவெடியை கண்டுபிடிக்கும் ஷூ: 7ஆம் வகுப்பு நெல்லை மாணவன் சாதனை

கண்ணிவெடியை அறியும் ஷூ கண்டுபிடித்து 7ஆம் வகுப்பு நெல்லை மாணவன் சாதனை படைத்துள்ளார்.

Updated On : 11 மார்ச் 2025, 6:00 pm IST
இந்திய ராணுவம்
பகிர்:

ராணுவ வீரர்களுக்கு உதவும் வகையில், கண்ணிவெடியை கண்டுபிடிக்கும் ஷூ கண்டுபிடித்து நெல்லையில் 7-ஆம் வகுப்பு மாணவர் சாதனை படைத்துள்ளார்.

மகிழ்ச்சி நகரை சேர்ந்த சாலமோன் டேவிட் என்ற மாணவர், பாளையங்கோட்டையிலுள்ள உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவர் தமிழ்நாடு ஐந்தாம் பட்டாலியன் என்.சி.சி.யில் இருக்கிறார்.

சாலமன் டேவிட்டிடம் தனித் திறமை இருப்பதை அறிந்த பட்டாலியன் லெப்டினென்ட் கர்னல் கார்த்திகேயன் மற்றும் சக அதிகாரிகள் அவரது திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் ஊக்கப்படுத்தினர். அவர்கள் அளித்த ஊக்கத்தால் மாணவன் சாலமோன் டேவிட் தற்போது ஸ்மார்ட் ஷூ ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இந்திய ராணுவ வீரர்கள் மிகவும் அபாயகரமான பகுதிகளில் போரில் ஈடுபடும் போது கன்னிவெடிகளில் இருந்து தப்பிக்க இந்த ஷூ உதவிகரமாக இருக்கும்.

Advertisement

Advertisement

இந்த ஷூ அணிந்து ராணுவ வீரர்கள் நடக்கும் போது சுமார் மூன்று மீட்டர் தூரத்தில் கண்ணிவெடி இருந்தால் கூட அது குறித்து சிக்னல் கொடுத்து எச்சரிக்கும். அதற்கான சென்சார் கருவியுடன் இந்த ஷூ தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவரின் இந்த கண்டுபிடிப்பு அசாத்தியமானது என்பதால், தமிழ்நாடு சார்பாக தில்லியில் நடைபெற்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் சாலமோன் டேவிட் பங்கேற்றார்.

சுமார் 55 பேர் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் சாலமன் டேவிட் கண்டுபிடிப்புக்கு முதலிடம் கிடைத்தது. தொடர்ந்து, இந்த ஷூவை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் காண்பித்து மாணவன் வாழ்த்து பெற்றார்.

பின்னர், நெல்லை வந்த மாணவனை நெல்லை சரக டி ஐ ஜி மூர்த்தி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.