திருவான்மியூர் ஏடிஎம்-ல் நூதன முறையில் திருட்டு: சிக்கியது வடமாநில கும்பல்!
திருவான்மியூர் ஏடிஎம்-ல் நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட வடமாநில கும்பல் சிக்கியது.
சென்னை: சென்னை, திருவான்மியூரில் அமைந்துள்ள ஏடிஎம் ஒன்றில், நூதன முறையில் பணத்தைத் திருடிய வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மும்பையில் உள்ள எஸ்பிஐ வங்கி தலைமை அலுவலகத்துக்கு வந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, பல்வேறு துறை நிபுணர்கள், காவல்துறையினருடன் இணைந்து நடத்திய விசாரணையில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வெளியே வரும் பகுதியில், வட மாநிலத்தைச் சேர்ந்த இருவர், கருப்பு நிற அட்டையை ஒட்டிவைத்துள்ளனர்.
Advertisement
Advertisement
யாரேனும் பணம் எடுக்க ஏடிஎம் இயந்திரத்துக்கு வந்தால், பணம் வெளியே வராது. இதனால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுவிடுவார்கள். பிறகு, இவர்கள் உள்ளே சென்று, அந்த அட்டையை எடுத்துவிட்டு பணத்தை எடுத்துக் கொள்வார்கள்.
இதுபோல பல ஏடிஎம் இயந்திரங்களில் கருப்பு அட்டையை வைத்துக் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து வாடிக்கையாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஏடிஎம் இயந்திரத்துக்குள் இருந்த சிசிடிவி கருவியில் பதிவான காட்சிகளை அலசி ஆராய்ந்தபோதுதான், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட கும்பல் நூதன முறையில் கொள்ளையடிக்க திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு 3 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.