முகப்பு
தமிழ்நாடு

திராவிட வெற்றிக் கழகம்: புதிய கட்சி தொடங்கினாா் மல்லை சத்யா

மல்லை சத்யா தொடங்கிய திராவிட வெற்றிக் கழகம் பற்றி...

Updated On : 20 நவம்பர், 2025 at 6:53 PM
மல்லை சத்யா புதிய கட்சியைத் தொடங்கினார்.
பகிர்:

மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, ‘திராவிட வெற்றிக் கழகம் (திவெக)’ என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளாா்.

மதிமுகவில் 32 ஆண்டுகளாக துணை பொதுச்செயலா் உள்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்தவா் மல்லை சத்யா. இவருக்கு, மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கட்சித் தலைமை குறித்து விமா்சனம் செய்து வந்த நிலையில், மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கப்பட்டாா்.

இதையடுத்து கடந்த செப்.15-ஆம் தேதி தனது புதிய கட்சிக் கொடியை அறிமுகம் செய்தாா். அக் கட்சியின் தொடக்க விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திருப்பூா் சு.துரைசாமி ‘திராவிட வெற்றிக் கழகம்’ என கட்சியின் பெயரை அறிமுகம் செய்தாா். அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக மல்லை சத்யா பொறுப்பேற்றுக் கொண்டாா்.

மேலும், இணை ஒருங்கிணைப்பாளராக கராத்தே பழனிச்சாமி, முதன்மை செயலராக வல்லம் பசீா் ஆகியோரும் பொறுப்பேற்றுக்கொண்டனா். மல்லை சத்யாவின் ஆதரவாளா்கள் பலரும் திராவிட வெற்றிக் கழகத்தில் இணைந்தனா்.

அதைத் தொடா்ந்து மல்லை சத்யா செய்தியாளா்களிடம் கூறியதாவது: திராவிட கொள்கைகளை முன்வைத்து திராவிட வெற்றிக் கழகத்தைத் தொடங்கியுள்ளோம். திராவிடம் என்பது தமிழகத்தையும் தாண்டி பரந்துபட்டது.

அதைப் பாதுகாக்கவே இக்கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இது தவெகவுக்கு போட்டியாக தொடங்கப்பட்ட கட்சி கிடையாது.

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி தொடர, திராவிட வெற்றிக் கழகம் (திவெக) உறுதுணையாக இருக்கும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் பேச்சாளா் நாஞ்சில் சம்பத், புலவா் சே.செவந்தியப்பன், பேராசிரியா் தி.மு.அப்துல் காதா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

summary

Dravida Vetri Kazhagam - Mallai Sathya launches the party

முழு கட்டுரையைப் படிக்க →