டிட்வா புயல் எங்கே, எப்போது கரையை கடக்கும்? முழு விவரம்
டிட்வா புயல் எங்கே, எப்போது கரையை கடக்கும் என்பது பற்றிய முழு விவரம்
வங்கக் கடலில், இலங்கைக்கு அருகே உருவாகியிருக்கும் டிட்வா புயல் காரணமாக தமிழகம், தெலங்கானா, கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் மழைப்பொழிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வானிலை ஆய்வின் கணிப்புப்படி, டிட்வா புயல், இலங்கை கடற்கரைக்கு அருகே வடமேற்கு திசையில் தென்மேற்கு வங்கக் கடலை ஒட்டி நகர்ந்து வருகிறது.
டிட்வா புயல் காரணமாக, நவம்பர் 30ஆம் தேதி தமிழகம், தெலங்கானா, கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
நவ. 30 வரை, கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 6 மணி நேரமாக, டிட்வா புயல் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது புதுச்சேரியிலிருந்து 430 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 530 கிலோ மீட்டர் தொலைவிலும் கடலில் நிலைகொண்டுள்ளது. இது மெல்ல நகர்ந்து நவ.30ஆம் தேதி அதிகாலை வட தமிழகம் - புதுச்சேரி - தெற்கு ஆந்திர கடற்கரையை ஒட்டி நிலவும்.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளியல், டிசம்பர் 2ஆம் தேதி வரை ஆந்திர மாநில கடலோர மாவட்டங்கள், ஏனாம், ராயலசீமா பகுதிகளில் கன முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது.
நவ. 30ஆம் தேதி கேரளத்தில் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் நவ. 29 வரை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுளள்து.
தெலங்கானாவில் நவ. 30 மற்றும் டிச. 1 வரை கனமழையும், கர்நாடகத்தின் தெற்கு உள் மாவட்டங்களில் நவ. 29ஆம் தேதி கனமழையும் பெய்யலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
எங்கே, எப்போது கரையைக் கடக்கும்?
வெள்ளிக்கிழமை முதல் டெல்டா பகுதியை நெருங்கி, புதுச்சேரி கடற்கரையை ஒட்டி இந்த புயல் வட கிழக்கு திசையில் நகரும் என்பதால், வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் டெல்டா பகுதிகளில் மழை நின்றுவிடும். பிறகு புதுச்சேரியில் மழை நீடிக்கும். சனிக்கிழமை காலை முதல் வட தமிழக மாவட்டங்கள் சென்னை மற்றும் செங்கல்பட்டு வரை மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், புயலானது வட தமிழகம் - தெற்கு ஆந்திரம் அருகே கரையைக் கடக்கலாம் அல்லது கடல் பகுதியிலேயே புயல் வலுவிழக்கலாம் என்றும், இன்னும் புயல் கரையைக் கடப்பது குறித்து வானிலை ஆய்வு மைய கண்காணிப்பில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதைய நிலவரப்படி, சென்னை கடலோரப் பகுதிகளை ஒட்டிச் சென்று கரையைக் கடக்காமல் வடகிழக்கு திசையில் டிட்வா புயல் கடலை நோக்கித் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Full details on where and when Cyclone Titva will make landfall
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.