நவ. 2-ல் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது.
மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் நவ. 2 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
நேற்று (அக். 30) மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (அக். 31) காலை 8.30 மணி நிலவரப்படி அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்திற்கு, வடக்கு-வடகிழக்கு திசையில், மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் வழியாக குஜராத் கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
தெற்கு மியான்மர் கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகக்கூடும்.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.