முகப்பு
தமிழ்நாடு

அறிவியல் பூர்வமான ஆய்வுகளே சமூக மாற்றத்திற்கான வழி: விஞ்ஞானி அசோக்குமார்

திருப்பூரில் நடைபெற்ற அறிவியல் கணித திருவிழா பற்றி...

Updated On : 4 செப்டம்பர், 2025 at 11:14 AM
சிறப்புரையாற்றும் விஞ்ஞானி அசோக்குமார் - Dinamani
பகிர்:

திருப்பூர்: அறிவியல் பூர்வமான ஆய்வுகளே சமூக மாற்றத்திற்கான வழி என்று விஞ்ஞானி அசோக்குமார் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை, வானவில் மன்றம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் காங்கேயம் கல்வி நிறுவனங்கள் இணைந்து மாணவ மாணவியருக்கான அறிவியல் கணித திருவிழாவை நடத்தினர்.

காங்கேயம் நத்தக்காடையூரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில், அன்றாட வாழ்வில் அறிவியல் மற்றும் கணித புதுமைகள் என்ற தலைப்பில் 530 ஆய்வுப் படைப்புகளை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சமர்ப்பித்தனர்.

இளநிலை, நடுநிலை மற்றும் முதுநிலை பிரிவுகளில் ஆய்வுகளை சமர்ப்பித்து முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு முறையே ரூ.5000, ரூ. 3000 மற்றும் ரூ. 2000 கல்வி உதவித் தொகையாக கல்லூரி நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.

ஆய்வுப் படைப்புகளை சமர்ப்பித்த மாணவிகள்.

விஞ்ஞானியுடன் சந்திப்பு

இந்த விழாவில் கலந்துகொண்ட சென்னை சவிதா பல்கலைக்கழக புதுப்பிக்கதக்க ஆற்றல் துறை விஞ்ஞானியும் பேராசிரியருமான அசோக்குமார் சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

“பள்ளிப் பருவத்திலேயே அறிவியல் ஆய்வுகளை செய்ய இதுபோன்ற அறிவுத் திருவிழா மேடைகளை ஒவ்வொரு மாணவரும் பயன்படுத்திக் கொண்டு தங்கள் அறிவை விரிவு செய்ய முடியும். கல்வி ஒன்றே உங்களை உயர்த்தும், தற்போது நாம் அனைவரும் எதிர்கொள்ளும் பெரும் சவால் காலநிலை மாற்றமும், சுற்றுச்சூழல் பாதிப்புகளும். இதில் குறிப்பிடத் தகுந்தது, புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் புதுமை கண்டுபிடிப்புகள் அதனை அறிவுத் திருவிழாவில் ஏராளமான மாணவர்கள் முயற்சி செய்து இருப்பது பாராட்டுக்குரியது. அதேபோல ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாடுகளுக்கு மாற்றாக பயோ பிளாஸ்டிக் வழிமுறைகளுக்கான ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

தற்போது ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் படர்ந்திருக்கும் ஆகாயத்தாமரையை அப்புறப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது. இந்தத் தாவரம் இனி சுமையல்ல, புதுப்பிக்கத்தக்க மூலப்பொருளாக மாறப்போகிறது என ஆய்வில் கண்டறிந்துள்ளோம். இதனை கொண்டு மக்கும் பயோ பாலித்தின் தயாரிக்கலாம்” எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய தமிழ்நாடு அறிவியல் இயக்க திருப்பூர் மாவட்டச் செயலர் கெளரி சங்கர், “ஆய்வுகள் என்ற பெயரில் சமூக ஊடகங்களில் அறிவியலுக்கு புறம்பான பல தகவல்கள் உலாவி வருகின்ற சூழலில், அறிவியல் மனப்பான்மை கொண்ட அறிவியல் பூர்வமான ஆய்வுகளை ஊக்கப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தொடர்ந்து களப்பணியாற்றி வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையும் உறுதுணையாக வானவில் மன்றம் போன்ற மன்ற செயல்பாடுகளின் மூலம் ஊக்கப்படுத்துகிறது. திருப்பூரில் நடைபெற்ற அறிவியல் கணித திருவிழா, தமிழ்நாட்டில் முன்மாதிரியான ஒரு அறிவுத் திருவிழாவாக திகழும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

summary

Mathematic Science Festival held in Tiruppur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.