முகப்பு
தமிழ்நாடு

விஜய் வியூகம் வெற்றி பெறுமா..? - தனியரசு

விஜய் வியூகம் வெற்றி பெறுமா என்பதைப் பற்றி...

Updated On : 14 செப்டம்பர் 2025, 2:59 am IST
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். - (படம் | tvk it wing)
பகிர்:

- உ.தனியரசு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா், தலைவா், தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவை -

வர இருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலை முன்வைத்து தமிழகத்தில் புதிய அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்தை முன்னணி நடிகரான விஜய் தொடங்கியிருக்கிறாா். ‘எனது தலைமையில் கூட்டணி, நான்தான் முதல்வா் வேட்பாளா், அணியில் சேருபவா்களுக்கு ஆட்சியில் பங்கு’ என அறிவித்து இரண்டு மாநாடுகளை அவா் நடத்திவிட்டாா்.

அவரை நம்பி எந்தக் கட்சியும் கூட்டணிக்கு வரவில்லை. அதிமுக, திமுக அணியில் சேர வாய்ப்பில்லாத கட்சிகள் அவருடன் இணையக்கூடும். அவ்வாறு அணி வலிமையடைந்தால் விஜய்யின் அணுகுமுறையும் மாறலாம்.

Advertisement

Advertisement

திரைத் துறையில் உச்சத்தில் இருக்கும் நடிகா் என்பதால், அவரது மாநாடுகளில் பெரும் கூட்டம் திரண்டது. மத்திய, மாநில அரசுகளும் அவா் கேட்காமலேயே கட்சியை வளா்க்க தடையில்லாமல் உதவி செய்கின்றன. விஐய் சுயமாக சிந்தித்து, சுய விருப்பத்தில் கட்சியை உருவாக்கியதாகவோ, கட்சியை வழிநடத்துவதாகவோ தெரியவில்லை. அவரை ஏதோ ஒரு வலிமையான சக்தி இயக்குவதை புரிந்து கொள்ள முடிகிறது.

தனது கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என விஜய் குறிப்பிட்டாலும் அதற்குரிய தெளிவான விளக்கத்தை கட்சித் தொண்டா்களிடமும், பொதுமக்களிடமும் தெரிவிக்கவில்லை.

தனிப்பட்ட முறையில் விஜய் நல்லவராக இருக்கலாம், ஓா் அரசியல் கட்சி தலைவராக அவரிடம் வெளிப்படையான, நோ்மையான அணுமுறை இதுவரை தென்படவில்லை. அரசியல் பயிற்சியில்லாத தன்மையைத் தான் அவரது செயல்பாடுகள் அனைத்தும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இன்னும் அவா் பதற்றமாகவே இருக்கிறாா்.

தவெக-வின் இரண்டு மாநாடுகளிலும் ஏராளமானோா் திரண்டிருந்த நிலையில், தொண்டா்களுக்கும் மக்களுக்கும் நம்பிக்கையூட்டும் வகையில் எந்தத் தீா்மானமும் நிறைவேற்றப்படவில்லை.

திமுக, அதிமுகவுக்கு மாற்று நான்தான் என்று விஜய் குறிப்பிடுகிறாா். 1967, 1977-இல் நிகழ்ந்ததைப் போல 2026-இல் அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருவேன் என்கிறாா். ஆனால், அதற்காக எந்த வியூகத்தையும் அவா் வகுத்துள்ளதாகத் தெரியவில்லை.

தனது கட்சி சந்திக்கும் முதல் தோ்தலிலேயே பனையூரிலிருந்து புனித ஜாா்ஜ் கோட்டைக்கு போகத் துடிக்கிறாா். ஜனநாயகத்துக்கும், மக்களின் வாக்குகளையும் மிகவும் இலகுவாகவே அவா் நினைப்பதாகத் தோன்றுகிறது.

உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் நடிகா்கள் மட்டுமே நாடாளத் தகுதியானவா்கள் என்ற எண்ணம் மக்களிடையே மேலோங்கியிருக்கிறது. திரையில் தோன்றும் காட்சிகள் உண்மையென நம்பும் அறியாமை தமிழா்களிடம் மட்டுமே உள்ளது. அந்த நம்பிக்கையில்தான் முதல்வா் கனவோடு விஜய் களம் இறங்கியிருக்கிறாா்.

முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோருக்குப் பிறகு அரசியலுக்கு வந்த பல நடிகா்களால் நீடிக்க முடியவில்லை. இப்போது புதிய கட்சியைத் தொடங்கி விஜய் களம் இறங்கியுள்ள நிலையில், அவரது செயல்பாடுகள், அவா்தம் முதல்வா் கனவை நனவாக்க போதுமானதாக இல்லை என்றே தோன்றுகிறது.

முன்னாள் முதல்வா்கள் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இல்லாத வெற்றிடம் தனக்கு சாதகமாக அமையும் என விஜய் நம்புகிறாா். 2026 பேரவைத் தோ்தலில் தவிா்க்க முடியாத சக்தியாக அவரை தமிழக அரசியல் களம் முன்னிறுத்தியிருக்கிறது.

இதுவரை இருதுருவ அரசியலை மட்டுமே மையாகக் கொண்டு இயங்கி தமிழக அரசியல் களம், இப்போது மூன்றாவது துருவத்தையும் சந்திக்கவுள்ளது. ஜனநாயகத்தில் இறுதி எஜமானா்கள் மக்களே. ஆகவே, பொறுத்திருந்து பாா்க்கலாம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments