முதல்வராக்கிய சசிகலாவை சந்திக்க தைரியம் இருக்கிறதா? - பழனிசாமிக்கு தினகரன் சவால்!
முதல்வராக்கி சிறைக்குச் சென்ற சசிகலாவை சந்திக்க தைரியம் இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமிக்கு டிடிவி தினகரன் சவால்...
முதல்வராக்கி சிறைக்குச் சென்ற சசிகலாவை சந்திக்க தைரியம் இருக்கிறதா? என முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமிக்கு அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் சவால் விடுத்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சசிகலாவுக்கு அடுத்தபடியாக அனுபவத்தின் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். மேலும், முன்னதாக நான் முதல்வர் என்று யாரிடமும் சொல்லாதீர்கள். யாரும் எனக்கு ஆதரவளிக்கமாட்டார்கள் என பழனிசாமி கூறினார்.
Advertisement
சசிகலா யாரைச் சொன்னாலும் முதல்வராக ஏற்றுக்கொள்ளும் நோக்கிலேயே எம்எல்ஏ-க்கள் இருந்தனர். ஆர்கே நகர் தேர்தலின்போது என்னுடன் தொப்பி அணிந்துகொண்டு ஓட்டு கேட்டவர் அவர்தானே? என்னை அன்பு அண்ணன் என்று தூக்கிவாரி பேசியதும் அவர்தானே?
அவரை (டிடிவி தினகரன்) கட்சியை விட்டு நீக்கியது ஏன்? எனக் கேட்டதற்கு தில்லியில் இருந்து வந்த உத்தரவு எனத் தெரிவித்தார். அமித் ஷாவும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளர் இல்லை என்று டெக்னிகலாக தான் கூறுகிறார். ஆனால், நீங்கள் நான்தான் முதல்வர் வேட்பாளர் எனக் கூறுகிறீர்கள்.
அமித் ஷாதான் தெளிவாக அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் முதல்வர் வேட்பாளர் ஆவார் என்று கூறுகிறாரே. தில்லிக்கு அழைத்து என்னை சமாதானப்படுத்த அழைத்தனர். நான்தான் அதற்கு முன்னதாகவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிவிட்டேனே.
நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமித் ஷா கூறும் முதல்வர் வேட்பாளரைத்தான் ஆதரிபேன்; எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பேன் எனக் கூறியிருக்கேனா?. எக்காரணத்தைக் கொண்டும் பழனிசாமியை ஏற்றுக்கொள்ள முடியாது.
தேனியில் செய்தியாளர் சந்திப்பில்கூட எங்கள் கூட்டணிக்கு (தேசிய ஜனநாயகக் கூட்டணி) தான் பழனிசாமிதான் வந்துள்ளார் எனக் கூறினேன். பழனிசாமி என்றாலே துரோகம், பொய்தான். அவருடையே டிசைனே அப்படிதான்.
அவரை(எடப்பாடி பழனிசாமி) முதல்வராக்கிவிட்டு சிறைக்குச் சென்றவர் என்னுடைய சித்தி சசிகலா. அவரைச் சந்திக்கும் தைரியம் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறதா?” என்றார்.