வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே மிளகாய்ப் பொடி தூவி 4 வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தின் பின்னணி வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டை பவளக்கார தெருவை சேர்ந்தவர் வேணு (33) - ஜனனி தம்பதியினர். வேணு ஐடி துறையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு நான்கு வயதில் யோகேஷ் என்ற ஒரே ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் தனியார் பள்ளியில் படிக்கும் தனது குழந்தையை தந்தை வேணு பள்ளி முடிந்து வீட்டுக்கு அழைத்து வந்தபோது, அங்கு வீட்டு வாசலில் காரில் காத்துக்கொண்டிருந்த நபர்கள் வேணு மீது மிளகாய் பொடி தூவி குழந்தையைக் கடத்தி சென்றனர்.
இது குறித்து கிடைத்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்தும், 7 தனிப்படைகள் அமைத்தும் காவல் துறை விசாரணையை துரிதப்படுத்தியது. பின்னர் 3 மணி நேரம் கழித்து குழந்தை மாதனூர் - பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரம் இருப்பதாகத் தகவல் தெரிந்து தனிப்படை காவல் துறையினரால் குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
காமாட்சியம்மன் பேட்டை அதே பவளக்கார தெருவை சேர்ந்த பாலாஜி என்பவரை, காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது, குழந்தையின் தந்தை வேணுவின் தங்கை சில ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார். இதற்க்கு தற்போது கைதான பாலாஜி உதவியதாகக் கூறி இரு வீட்டாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதே சமயம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக ஓட்டுநராக பணியாற்றி வரும் பாலாஜி, வாடகைக்கு கார் ஓட்டும் வேலையையும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் கார் ஓட்டிச்சென்றபோது, சென்னை சுங்குவார்சத்திரம் அருகே விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் 8 லட்சம் செலவு ஆனதாகவும், இதில் 4 லட்சத்தை இன்சூரன்ஸ் மூலம் பெறப்பட்ட நிலையில் மீதம் உள்ள 4 லட்சத்தை விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் பாலாஜிதான் தர வேண்டும் என கார் உரிமையாளர் பாலாஜிக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஏற்கெனவே இருந்த முன் விரோதம் மற்றும் வசதியான குடும்பம் என்பதால் 4 லட்சம் பணம் கேட்டு குழந்தையைக் கடத்த திட்டம் தீட்டி தனது கூட்டாளி விக்ரம் என்பரோடு சேர்ந்து குழந்தையைக் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், போலியான கர்நாடக பதிவு எண் கொண்ட காரில் குழந்தையைக் கடத்திக்கொண்டு மாதனூரை கடக்கும்போது, குழந்தைக் கடத்தல் செய்தி அனைத்து ஊடகத்திலும் வருவதை அறிந்தும், காவல் துறை தீவிரம் காட்டுவதையும் அறிந்தும் குழந்தையை மாதனூர் அருகே பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரம் விட்டுச்சென்றுள்ளார்ர்.
இதோடு இல்லாமல் ஒன்றும் தெரியாததுபோல், குழந்தையின் தந்தை நண்பர்களுக்கு தொலைபேசி மூலம் "குழந்தை மாதனூர் அருகே இருப்பதாக எனக்கு தகவல் வந்ததாகவும் கூறியுள்ளார்".
இதனையடுத்து, காவல் துறையினர் குழந்தையை பெற்றோரோடு சென்று மீட்டுள்ளனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து, தலைமறைவாக உள்ள பாலாஜியின் கூட்டளி விக்ரம் என்பவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: அறுவை சிகிச்சை குழந்தைப் பேறுக்கு பேராசை பிடித்த மருத்துவர்களே காரணம்: சந்திரபாபு நாயுடு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.