தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு கேமரா சின்னம் ஒதுக்கீடு!
தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு கேமரா சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக....
எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போட்டியிடுவதற்கு கேமரா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2021 பேரவைத் தோ்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் தி. வேல்முருகன் வெற்றி பெற்றார். இந்த முறை தனிச் சின்னம், குறைந்தபட்சம் 2 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி வந்தார்.
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு, தமிழக அரசுப் பணிகளில் 100 சதவீதம் தமிழர்களுக்கே முன்னுரிமை, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துதல் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை திமுக தனது தோ்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் அல்லது உறுதி அளிக்க வேண்டும் என அவர் நிபந்தனை விதித்திருந்தார்.
Advertisement
ஆனால், திமுக தரப்பில் மீண்டும் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முடியும் முதல்கட்ட பேச்சுவார்த்தையில் திமுக தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டதால் அவர் அதிருப்தியில் இருந்து வந்தார்.
இதனிடையே, திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி வெளியேறி, அந்தக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் புதிய அணி உருவானது.
தமிழகம் முழுவதும் சுமார் 200 தொகுதிகளில் வேட்பாளர்கள் நோ்காணல் நடந்து வேட்பாளர்களை தேர்வு செய்துவிட்டதாகவும், அடுத்த சில நாள்களில் 234 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி தனது கட்சியின் பலத்தை நிரூபிக்க தாயாராகி வருவதாகவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ‘கேமரா’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என அக்கட்சித் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ‘கேமரா’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு பிறகு, இந்தச் சின்னத்தை தோ்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
சென்னை பெரம்பூா் தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் துணை பொதுச் செயலா் வேணுகோபால் போட்டியிடுகிறாா். தொடா்ந்து, வட தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்குள்பட்ட 100 தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். நான் (தி.வேல்முருகன்) போட்டியிடும் தொகுதி குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை எங்களுடன் இணைந்துள்ள கூட்டணி கட்சிகளுக்கு சுமாா் 100 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள. மேலும், தென் மாவட்டங்களை மையமாக கொண்டு செயல்படும் சில கட்சிகள் எங்களது கூட்டணியில் இணையவுள்ளன. அவா்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னா், இறுதிக்கட்ட வேட்பாளா்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றாா்.