வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் நிறைவு!
வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் நிறைவு பெற்றுள்ளது குறித்து...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் இன்று(ஏப். 9) பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது.
பேரவைத் தேர்தலையொட்டி கடந்த 30-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. அனுமதிக்கப்பட்ட நான்கு நாள்களில் மொத்தம் 7,599 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
முதல் நாளிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 4-ஆம் தேதி மனு தாக்கல் செய்தார்.
Advertisement
எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, சாத்தூரில் பாஜக தலைவா் நயினார் நாகேந்திரன், விருத்தாசலத்தில் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் தங்களுடைய வேட்புமனுக்களை கடந்த 6-ஆம் தேதி தாக்கல் செய்தனர்.
மு.க.ஸ்டாலின், உதயநிதி, எடப்பாடி பழனிசாமி, சீமான், விஜய், நயினார் நாகேந்திரன், செல்வப்பெருந்தகை, பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
வேட்புமனுக்கள் பரிசீலனை முடிந்து அதன் விவரம் அறிவிக்கப்படுவது செவ்வாய்க்கிழமை நள்ளிரவைத் தாண்டியும் தொடர்ந்து நடைபெற்றது. இறுதிக்கட்ட தகவல்படி 234 தொகுதிகளிலும் சோ்த்து 4,973 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 159 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன.
வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான காலஅவகாசம் வியாழக்கிழமை (ஏப். 9) பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலைக்குள் வெளியிடப்படும். இதையடுத்து, வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.