ஏப். 16-ல் தவெக முழு தேர்தல் அறிக்கை: விஜய்
தவெக தேர்தல் அறிக்கை குறித்து தவெக தலைவர் விஜய் பேசியது.
தவெகவின் முழு தேர்தல் அறிக்கை வரும் ஏப்.16 ஆம் தேதி வெளியிடப்படும் என்று திருப்பூரில் தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 8 நாள்களே இருக்கும் நிலையில், தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று (ஏப். 14) திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வெற்றி கழக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.
Advertisement
தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை நாள் என்பதால், அதிகளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
கூட்டம் அதிகளவில் காணப்பட்டதால், பெருமாநல்லூரில் இருந்து பூலுவப்பட்டி வரையிலான விஜய்யின் சாலை வலம் ரத்து செய்யப்பட்டது.
விஜய்யின் சாலை வலம் ரத்து செய்யப்பட்டதால், நீண்ட நேரமாக காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
விஜய் திருப்பூர் பிரசாரத்தில் பேசும்போது, “தவெகவின் முழு தேர்தல் அறிக்கை வரும் ஏப்.16 ஆம் தேதி வெளியிடப்படும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவது குறித்து தவெக அரசு பரிசீலிக்கும்.
பதவி உயர்வுக்கு பணம் பெறும் கலாசாரத்தை தமிழக வெற்றிக் கழகம் முடிவுக்குக் கொண்டுவரும். காவலர்களின் அடிப்படை மாத ஊதியம் ரூ.18,000-ல் இருந்து ரூ. 25,000 ஆக உயர்த்தப்படும்” என்றார்.