வாக்குப்பதிவு நாளில் மழைக்கு வாய்ப்பு!
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள ஏப். 23 ஆம் தேதி மழைக்கு வாய்ப்பு.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள ஏப். 23 ஆம் தேதி மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சுமார் 0.9 கிமீ உயரத்தில், வட உள் கர்நாடகம் முதல் மன்னார் வளைக்குடா வரை தெற்கு உள் கர்நாடகம் மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
Advertisement
இதன் காரணமாக, ஏப். 19 முதல் ஏப். 21 வரை: மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப். 21 முதல் ஏப். 23: மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர டெல்டா மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்
ஏப். 24 முதல் 25 வரை: மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
ஏப். 19 முதல் ஏப். 23 வரை: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.