உதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு அன்புமணி கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி...
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கும், அவர் மீதான கைது நடவடிக்கைக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுக சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இழிவாகப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தவெக மகளிரணி அளித்த புகாரில், தஞ்சாவூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து இன்று கைது செய்துள்ளனர்.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அன்புமணி தெரிவித்திருப்பதாவது:
”உதயநிதி ஸ்டாலினின் பேச்சும், கைதும் கண்டிக்கத்தக்கவை. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஆக்கப்பூர்வ அரசியலை முன்னெடுக்க வேண்டும்.
மேக்கேதாட்டு அணை கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் குறித்து தெரிவித்த சில கருத்துகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கைது செய்யப்பட்டிருக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் பேச்சும், கைது நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை; இரண்டும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
தஞ்சாவூர் போராட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத கண்ணியமற்றதாகும். இது கண்டிக்கத்தக்கது. துணை முதலமைச்சர் பொறுப்பு வகித்த, எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு வகிக்கும் ஒருவர் கண்ணியமான முறையில் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில், உதயநிதி ஸ்டாலினை இவ்வளவு அவசரமாக கைது செய்ய வேண்டிய தேவை இல்லை. நண்பகல் 12 மணி வரை அவரை கைது செய்வதைத் தவிர்க்கும்படி உயர்நீதிமன்றமே அறிவுறுத்திய பிறகும் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருக்கும் ஒருவரை, அதுவும் நாளை சட்டப்பேரவைக் கூடவுள்ள நிலையில் கைது செய்ய வேண்டிய அவசரம் இல்லை. தமிழகத்தின் தலையாய பிரச்சினைகளில் கூட காட்டப்படாத அவசரத்தை இந்த கைது நடவடிக்கையில் அரசும், காவல்துறையும் காட்டியதன் பின்னணியில் இருப்பது அரசியல் மட்டும் தான்.
தமிழ்நாட்டில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன. அவற்றைத் தீர்ப்பதில் தான் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அக்கறை காட்ட வேண்டுமே தவிர இது போன்ற செயல்களில் அல்ல. இனியாவது ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஆக்கப்பூர்வ அரசியல் செய்ய முன்வர வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருப்பதால் சட்டம் - ஒழுங்கு எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
No need for an urgent arrest - Anbumani condemns
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.