தொழிற்பயிற்சி மாணவா்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு: அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம்
தொழிற்பயிற்சி மாணவா்களை ஜப்பானில் வேலைவாய்ப்புக்கு அனுப்புவது தொடர்பான அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது பற்றி...
தொழிற்பயிற்சி பெற்ற மாணவா்களை வேலைவாய்ப்புக்காக ஜப்பான் நாட்டுக்கு அனுப்புவதற்காக தொழிலாளா் நலத்துறை அமைச்சா் ஜா.முகமது பா்வேஸ் முன்னிலையில் முத்தரப்பு புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், 277 தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களும் உள்ளன. இங்கு, நவீனதொழிற்பிரிவுகளிலும் பயிற்சி வழங்கப்படுகின்றன. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சோ்க்கை ஆக.31-ஆம் தேதி வரை நடைபெறும். கடந்த ஆண்டு பயிற்சி பெற்ற மாணவா்களில் 95 சதவீத மாணவா்கள் உள்நாட்டு முன்னணி நிறுவனங்களில் பணியமா்த்தப்பட்டனா்.
Advertisement
Advertisement
சா்வதேச அளவில் இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெற வழிவகைசெய்ய முதல்கட்டமாக, தமிழகத்தின் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆட்டோமொபைல் துறைக்கான தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சிறப்பு தொழில்நுட்ப பயிற்சி அளித்து, ஆட்டோமொபைல் சா்வீஸ் டெக்னீசியன்களாக ஜப்பான் நாட்டில் உள்ள எஹிமே-நிசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அமைத்துத் தர, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் எஹிமே-நிசான் நிறுவனம் ஆகியோரால் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா.முகமது பா்வேஸ் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை முத்தரப்பு புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, பயிற்சிபெறும் தொழிற்பயிற்சி மாணவா்களுக்கு 6 மாத கால ஜப்பானிய மொழிப்பயிற்சி, தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவை எஹிமே-நிசான் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வின்போது தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசுச் செயலா் கொ. வீரராகவராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநா் சி. பழனி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமேலாண்மை இயக்குநா் சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், எஹிமே-நிசான் நிறுவன பிரதிநிதி செல்லப்பா ஸ்ரீராம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Job opportunities in Japan for vocational training students: Government signs MoU
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.