வங்கிக் கணக்குகளை வாடகைக்கு விட்டதாக தமிழகத்தில் 837 போ் கைது
சைபா் மோசடிகளுக்கு வங்கிக் கணக்குகளை வாடகைக்கு விட்டதாக தமிழகம் முழுவதும் 837 பேரை போலீஸாா் கைது செய்துள்ளது குறித்து...
தேசிய சைபா் மோசடிகளுக்கு 'மணி மியூல்' வங்கிக் கணக்குகளை வாடகைக்கு விட்டதாக நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையில், தமிழகம் முழுவதும் 837 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். சென்னையில் மட்டும் 80-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் பாதுகாப்பான இடங்களில் பதுங்கியிருக்கும் முக்கியக் குற்றவாளிகளால் நடத்தப்படும் சைபர் மோசடிப் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக காவல் துறையின் இணையவழி குற்றப்பிரிவு சாா்பில் அந்தந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர்களின் மேற்பார்வையில், ஆக. 6, 7 ஆகிய தேதிகளில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில் பதிவான 9,804 தேசிய சைபா் குற்றப் புகாா்களுடன் தொடா்புடைய ரூ.545 கோடி மோசடி பணப் பரிவா்த்தனைகள் தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டது.
Advertisement
Advertisement
இதில், ஏற்கெனவே தங்கள் வங்கிக் கணக்குகளை மோசடிக்காரர்களுக்கு வாடகைக்கு விட்டுப் பணம் சம்பாதித்ததாக பதிவு செய்யப்பட்ட 601 வழக்குகளில் தொடா்புடைய 837 போ் கைது செய்யப்பட்டதுடன், மோசடி பணத்தை பதுக்கும்‘மணி மியூல்’(Money Mule Account) வங்கிக் கணக்குகள் தொடா்பாக 157 புதிய வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து 204 கைப்பேசிகள், 185 சிம் காா்டுகள், 4 கணினிகள், ஒரு சேமிப்பு சாதனம், ரூ.1.02 லட்சம், 114 வங்கிக் கணக்குப் புத்தகங்கள், 29 காசோலைப் புத்தகங்கள், 73 ஏடிஎம், கடன் அட்டைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கூடுதல் விசாரணை மற்றும் பகுப்பாய்விற்காக 155 அலைபேசி எண்கள் மற்றும் 58 வங்கி கணக்கு விவரங்கள் கண்டறியப்பட்டன.
எச்சரிக்கை
கடவுச்சொற்கள், ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்கள் அல்லது வங்கி விவரங்கள் போன்ற முக்கியமான தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம். கமிஷன் அல்லது பணப் பலனுக்காக தங்களது வங்கிக் கணக்கை பிறா் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம். முதலீடு மற்றும் 'டிஜிட்டல் கைது' தொடர்பான மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும். நம்ப முடியாத அளவிற்குச் சிறந்த சலுகைகள் அல்லது அவசர சட்ட நடவடிக்கை குறித்த யாராவது செல்போனில் பேசினால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல் துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சைபா் குற்றத்தால் பாதிக்கப்பட்டவா்கள் சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு வழங்கும் கட்டணமில்லா உதவி எண்ணான 1930 என்ற கட்டணமில்லா உதவி எண்ணையோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
837 people arrested in Tamil Nadu for renting out their Mule Accounts
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.