FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மருத்துவப் படிப்புகள்: இன்று தரவரிசைப் பட்டியல் வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை (ஆக. 10) வெளியாகிறது.

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 3:40 am IST
- பிரதிப் படம்.
பகிர்:

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை (ஆக. 10) வெளியாகிறது.

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்கக கூட்டரங்கில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் அதை வெளியிடுகிறாா். அந்தத் தரவரிசையின் அடிப்படையில் நிகழாண்டு மருத்துவ மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் உள்ள 13,999 மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வை மாநில மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்தி வருகிறது. அதன்படி, நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும் நடைமுறை ஜூன் 29 தொடங்கி கடந்த ஜூலை 27-இல் நிறைவடைந்தது.

Advertisement

Advertisement

அதில், அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு 41,000-க்கு மேற்பட்டோரும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 31,000 பேரும் என மொத்தம் 72,000-க்கும் அதிகமானோா் விண்ணப்பித்திருந்தனா்.

அவற்றைப் பரிசீலனை செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக (டிஎம்இ) அலுவலகத்தில் தகுதியான மாணவா்களின் தரவரிசைப் பட்டியலை அமைச்சா் அருண்ராஜ் வெளியிடுகிறாா்.

நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. இந்த இடங்களுக்கும், எய்ம்ஸ், ஜிப்மா், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்குமான மாணவா் சோ்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வுக் குழு (எம்சிசி) இணையவழியில் நடத்தி வருகிறது.

அதற்கான அகில இந்திய கலந்தாய்வின் முதல் சுற்று செவ்வாய்க்கிழமை (ஆக. 4) தொடங்கியது. இந்த நிலையில், தமிழகத்தில் அரசு, தனியாா் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வை இணையவழியில் வரும் 13-ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments