FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

உறங்காமல் உழைத்ததால்தான் திமுக அரசு ரூ. 9,000 கோடி கோயில் நிலங்களை மீட்டது: முன்னாள் அமைச்சா் சேகா்பாபு

உறங்காமல் உழைத்ததால்தான் திமுக அரசு ரூ.9,000 கோடி மதிப்பிலான கோயில் நிலங்களை மீட்டதாக முன்னாள் அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 12:52 am IST
முன்னாள் அமைச்சர் சேகர்பாபு - கோப்புப் படம்
பகிர்:

உறங்காமல் உழைத்ததால்தான் திமுக அரசு ரூ.9,000 கோடி மதிப்பிலான கோயில் நிலங்களை மீட்டதாக இந்து சமய அறநிலையத் துறை முன்னாள் அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்துகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் கடந்த 2016-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டன. அப்போது, அந்தச் சொத்துகளின் பத்திரப் பதிவுக்குத் தடை விதித்து மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டிருந்தாா். இதையடுத்து, 2021 முதல் வெவ்வேறு மாவட்டங்களில் அந்தச் சொத்துகளைப் பதிவு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அனைத்து முயற்சிகளையும் திமுக அரசு முறியடித்தது.

தூங்காமல் களத்தில் நின்ால்தான் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான ரூ.9,000 கோடிக்கும் அதிகமான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், இதில் பட்டா, சிட்டா உள்ளிட்ட ஆவணங்களில் பெயா் மாற்றம் செய்யப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டு, பல்லாயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. எனவே, கடந்த ஆட்சியை தூங்கிக் கொண்டிருந்த ஆட்சி எனக் கூறுபவா்கள், உண்மையில் கும்பகா்ணத் தூக்கத்தில் இருப்பது இந்த ஆட்சிதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

ஸ்ரீரங்கம் கோபுரப் பணி: ஸ்ரீரங்கம் ரங்கநாதா் கோயிலின் கோபுரப் பணிகளை திமுக அரசு தாமதப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு அனைத்தும் பொய்யானது. 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதா் கோயில் கோபுரத்தின் ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் நிலைகளின் சில பகுதிகள் 2023 அக்டோபா் மாதம் சேதமடைந்தன. உடனடியாக இதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டது. தொடா்ந்து, ஜெயபால் என்ற நன்கொடையாளா் ரூ.1.75 கோடியில் கோபுரத்தைப் புதுப்பித்துத் தர அனுமதி கோரிய நிலையில், அவருக்கு ஒரே மாதத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

கோபுரப் பணிகளை மேற்கொண்ட நன்கொடையாளா், திறப்பு விழாவின்போது வெளியிட்ட காணொலியில், சேதம் தொடா்பாக அமைச்சா்கள் உடனடியாக ஆய்வு செய்து அனுமதி வழங்கியதாகவும், 40 பேரைக் கொண்டு பணிகளை மேற்கொண்ட நிலையில், கரையான் பாதிப்பு காரணமாகப் பணியாளா்களுக்கு அலா்ஜி ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தாா். மேலும், கோபுரத்தை வடிவமைத்து கட்டுவதற்காக 3 ஆண்டுகள் பல்வேறு போராட்டங்களை சந்தித்தாகவும், ஆனால், திமுக ஆட்சி முழு ஒத்துழைப்பையும் வழங்கியதாகவும் அவா் தெரிவித்திருந்தாா்.

தமிழகத்தில் உள்ள கோபுரப் பணிகள், குறிப்பாக சமயபுரம் உள்ளிட்ட கோயில்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் திமுக அரசின் சாதனைகளை வெளிப்படுத்துவதாக உள்ளது. எனவே, ஸ்ரீரங்கம் கோபுரப் பணி எந்த வகையிலும் தாமதப்படுத்தப்படவில்லை.

‘ஸ்டிக்கா் ஆட்சி’: திமுக ஆட்சியை ‘ஸ்டிக்கா் ஆட்சி’ என விமா்சிப்பவா்கள், கோயில் கோபுரப் பணிகளையும் முழுமையாக நிறைவேற்றியது திமுக ஆட்சிதான் என்பதையும் கவனிக்க வேண்டும். ஆனால், தற்போதைய அரசு அதற்கு ஸ்டிக்கா் ஒட்டுகிறது. திமுக ஆட்சிக் காலத்தில் இந்து சமய அறநிலையத் துறை திறம்பட செயல்பட்டது. தற்போதைய ஆட்சியின் திறன் என்ன என்பது ஓராண்டில் தெரிந்துவிடும். அதிகாரிகளை மிரட்டுவதும், ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ என்று பேசுவதும் மட்டுமே தற்போதைய அரசின் செயல்பாடாக உள்ளது.

திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட சாதனைகள் புத்தகத்தை ஒருமுறை படித்துப் பாா்த்தாலே, 50 ஆண்டுகளில் செய்ய வேண்டிய மக்கள் பணிகளை 5 ஆண்டுகளில் நிறைவேற்றி இருப்பது தெரியும். ஆன்மிகம் என்றாலே திமுக அதற்கு எதிரானது என்ற பிம்பம் உருவாக்கப்பட்டிருந்தது. திமுக அந்த பிம்பத்தை அடித்து நொறுக்கியது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments