குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!
குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு என பட்ஜெட் விவாதத்தில் அமைச்சர் மரிய வில்சன் அசத்தலாக பேசியது பற்றி..
குட்டிக்கதை, சினிமா வசனம், எம்ஜிஆர் நடித்த பாடலுடன் பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் பேரவையில் பதிலுரையாற்றி வருகிறார்.
தமிழக சட்டபேரவையில் 2026 - 27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதன் மீதான பொது விவாதம் நடைபெற்று முடிந்த நிலையில், நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று பதிலுரை ஆற்றினார்.
மரிய வில்சன் பேரவையில் பதிலுரை ஆற்றியபோது, தான் பட்ஜெட் தாக்கல் செய்து பேசியிருந்தாலும், இதுதான் என்னைப் பொறுத்தவரை கன்னி உரை. இதனை ஒரு குட்டிக் கதையில் தொடங்க விரும்புகிறேன்.
Advertisement
Advertisement
கதை நேரம்
அடுத்து இந்த நாட்டை ஆளப்போவது யார்? என்று ஒரு போட்டி வைத்திருந்தார் ஒருவர் பெரியவர். அதற்கு நிறைய இளைஞர்களை அழைத்து, அவர்களிடம் ஒரு விதையைக் கொடுத்தார். நீங்கள் அனைவரும் மூன்று மாதம் கழித்து இந்த விதையை மரமாக வளர்த்து பூக்களாக மலர்ந்து இருக்கும் போது இங்கு வாரங்கள் என்று கூறி அனுப்பினார்.
மூன்று மாதம் முடிந்தது. அனைத்து இளைஞர்களும் வந்திருந்தனர். பெரிய பெரிய செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்கிய செடிகளுடன் அந்த பெரியவரிடம் வந்து நின்றார்கள்.
ஒருவர் மட்டும் ஒன்றும் வளராத நிலையில் பானையைக் கொண்டு வந்து கொடுத்தார். அதைப் பார்த்து பலரும் சிரிக்கிறார்கள். கிண்டல் செய்கிறார்கள்.
அப்போது அந்த பெரியவர் சொல்கிறார் இவர்தான் வெற்றி பெற்றார். இவர்தான் தலைவராக தகுதி படைத்தவர் என்கிறார்.
நாங்கள்தானே செடியை வளர்த்துக் கொண்டு வந்துள்ளோம் என்று மற்றவர்கள் கேட்க, அதற்கு அந்த பெரியவர் சொன்னாராம். நான் கொடுத்த விதை வேக வைத்தது. அது ஒரு நாளும் முளைக்காது. எனவே, வெற்றி பெறுவதற்காக பொய் சொல்லாமல் குறுக்கு வழியை தேர்வு செய்யாமல் நேர்மையாக இருந்தால் எல்லாம் இங்கு சாத்தியம் என்பதை இவர் நிரூபித்துள்ளார்.
நேர்மையாக இருந்து, குறுக்கு வழியில் செல்லாமல் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு எங்கள் தலைவர்தான் சாட்சி என்று கூறினார்.
சினிமா வசனம்
தொடர்ந்து பேசிய மரிய வில்சன், மர்மயோகி படத்தில் எம்ஜிஆர் பெயர் கரிகாலன். அந்த படத்தில் ஒரு வசனம் வரும்,
"குறிவைத்தால் தவறமாட்டேன்
தவறுமானால் குறியே வைக்க மாட்டேன்" என்று பேசியிருந்தார்.
அவர் சொன்னதை சாதித்துக் காட்டியவர்தான் எங்கள் முதல்வர் விஜய் என்று சினிமா வசனத்தை அவையில் பேசினார் மரிய வில்சன்.
தொடர்ந்து, கதை சொல்லிவிட்டேன், சினிமா வசனமும் பேசிவிட்டேன், நிறைவாக ஒரு பாடலையும் பாடி விடுகிறேன் என்று,
திரையிசைப் பாடல்
கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரனாகலாம்
பொறுமை இருந்தால் மனிதனாகலாம்
மூன்றும் இருந்தால் தலைவனாகலாம் என்று எம்ஜிஆர் பாடியிருந்தார்.
அப்போதே எங்கள் தலைவரைப் பற்றி இந்த பாடல் வந்திருக்கிறது என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை குட்டிக்கதை, வசனம், பாடல் என விதவிதமாக, பட்ஜெட் பொது விவாதத்தில் புகழுரை ஆற்றி அசத்தியிருந்தார் நிதியமைச்சர் மரிய வில்சன்.
Short story, movie dialogue, and a song: Minister Maria Wilson dazzled during the budget debate!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.