கும்மிடிப்பூண்டியில் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை!
கும்மிடிப்பூண்டியில் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து..
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த சானாபுத்தூரில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட விரோதத்தில் கல்லூரி மாணவர் ரஞ்சன்(18) வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கும்மிடிப்பூண்டி அடுத்த சானாமதுரை சார்ந்த ராஜா -மஞ்சு தம்பதியரின் மகன் ரஞ்சன். இவர் ப்ளஸ் டூ முடித்து கல்லூரியில் படிக்க சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்க்கை முடித்து இருந்தார். ஆனால் இன்னும் கல்லூரிக்கு அவர் செல்லவில்லை.
ரஞ்சன் அப்பகுதியை சேர்ந்த சில நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானார். சில நாள்களுக்கு முன்புகூட அவருக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அக்கம் பக்கத்தார் சமரசம் செய்து வைத்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் சமாதி ஒன்றின் மீது வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அந்த வழியே சென்றவர்கள் இது குறித்து அறிந்து மாதிரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தொடர்ந்து பாதிரிவேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து ரஞ்சனின் உடலை கைப்பற்றி உடல்கூராய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் இந்த கொலை சம்பவம் குறித்து திருவள்ளூர் எஸ்.பி சாய் பிரனீத் , கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி சசிதரன், மற்றும் வெங்கடேசன், ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் வீரமணி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வியாழக்கிழமை இரவு ரஞ்சன் அவரது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள சுடுகாடு பகுதியில் மது அருந்தியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் இது தொடர்பாக சானாபுத்தூரை சேர்ந்த காமேஷ் தணிகாசலம் ஆகிய இருவரை தனி தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் திருவள்ளூர் மாவட்ட டிஎஸ்பி சாய் பிரனீத் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.
சானாபுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதாகவும் இதன் காரணமாக அப்பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சட்ட விரோத செயல்கள் நடைபெறுவதாகவும் கூறும் அப்பகுதி மக்கள், கஞ்சா விற்பனை மற்றும் இளைஞர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானதன் காரணமாக இது போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக கூறுகின்றனர்.
கும்மிடிப்பூண்டியில் 18 வயது கல்லூரி மாணவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
College student hacked to death in Gummidipoondi!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.