ஒகேனக்கல் வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு!
ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தை பற்றி...
ஒகேனக்கல் வனப்பகுதியில் நிலவும் வறட்சியினால் உணவு தேடி அடர் வனப் பகுதியை விட்டு அவ்வப்போது சாலையைக் கடந்து செல்லும் சிறுத்தையால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகின்றனர்.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதி சுமார் 16 ஹெக்டர் பரப்பளவு கொண்டுள்ளது. ஆண்டுதோறும் கர்நாடக மாநில வனப்பகுதியிலிருந்து இடம்பெயரும் யானைக் கூட்டங்கள், மான், கரடி, கேளை ஆடு,கடமான், செந்நாய், குள்ளநரி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.
வனப்பகுதியில் உணவு சங்கிலி சரிவர இருப்பதால், வேட்டையாடி உண்ணும் விலங்கினங்கள் வெளியே வராமல் இருந்தன. தற்போது ஒகேனக்கல் வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால், உணவுத் தேடிக் கடந்த சில நாள்களாக சிறுத்தை அவ்வப்போது சாலையைக் கடந்து ஒகேனக்கல் வனப்பகுதியில் இருந்து பென்னாகரம் வனப்பகுதிக்கு உணவு தேடி செல்கிறது.
Advertisement
Advertisement
இதனால் தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தளத்தின் ஒன்றான ஒகேனக்கல் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், அவ்வழியாக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் செல்லும் சுமார் 500-க்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டு மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகின்றனர்.
இதுகுறித்து ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் சிவக்குமாரிடம் கேட்டபோது,
ஒகேனக்கல் அடர் வனப்பகுதிக்குள் இருந்த சிறுத்தையின் நடமாட்டம் தற்போது வெளியே தெரிகிறது. காரணம் வனப்பகுதியில் நிகழும் வறட்சியினால் உணவு தேடி இடம்பெயரும் மான் கூட்டத்தை வேட்டையாட சிறுத்தை வெளியே வந்துள்ளது.
வனத்துறையின் சார்பில் வனவிலங்குகளுக்கு அதிக அளவில் குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதால், பற்றாக்குறை ஏதுமில்லை. சிறுத்தை நடமாட்டம் குறித்து வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரம், தண்ணீர் தொட்டிகள் உள்ள பகுதி, அடிக்கடி வனவிலங்குகள் வெளியேறும் இடங்கள், வனப்பகுதியில் ஒன்று கூடும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
அதன் மூலம் சிறுத்தையின் நடமாட்டம் கண்டறிந்து, பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஒகேனக்கல் வனப்பகுதியில் இரவு நேரங்களில் இடம்பெயர்ந்த சிறுத்தை தற்போது பென்னாகரம் வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளது. சிறுத்தையின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.