கம்யூனிஸ்ட்டுகள் கணக்கெடுப்பு; வட்டாட்சியரின் இடமாற்றம் ஏற்புடையதல்ல! - பெ. சண்முகம்
கம்யூனிஸ்டுகள் கணக்கெடுப்பு குறித்த விவரங்களைக் கேட்ட வட்டாட்சியரின் இடமாற்றம் அரசின் மோசமான அணுகுமுறை என்று சிபிஐ(எம்) மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
கம்யூனிஸ்டுகள் கணக்கெடுப்பு குறித்த விவரங்களைக் கேட்ட வட்டாட்சியரின் இடமாற்றம் அரசின் மோசமான அணுகுமுறை என்று சிபிஐ(எம்) மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “கம்யூனிஸ்டுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்த சட்டவிரோதமாகக் குறிப்பாணை வெளியிட்ட குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அவர் பயிற்சி முடித்து விடுவிக்கப்பட்டு, சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் பணியேற்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்திருப்பது ஏற்புடையதல்ல!
Advertisement
Advertisement
வட்டாட்சியரின் செயல் சட்டவிரோதமானதும் கடும் கண்டனத்திற்குரியதும் ஆகும். மாநில அரசின் வழிகாட்டலின் அடிப்படையில் தான் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை என்றால், அரசின் அணுகுமுறை மிக, மிக மோசமானது. வட்டாட்சியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகாவில் அய்யாசாமி என்பவர் வட்டாட்சியராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த வாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தங்கள் பகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு வட்டாட்சியர் அய்யாசாமியிடம் மக்களுடன் சென்று மனு அளிக்கச் சென்றுள்ளனர்.
வட்டாட்சியரிடம் மனு அளிக்கும்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் புகைப்படம் எடுத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வட்டாட்சியர் புகைப்படம் எடுக்கக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றியதால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை கைது செய்யச் சொல்வேன் எனக் கூறி காவலர்களையும் வரவழைத்துள்ளார். போலீஸார் வட்டாட்சியருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
இதையடுத்து வட்டாட்சியர் அய்யாச்சாமி, குஜிலியம்பாறை தாலுகாவிற்குள்பட்ட வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டார்.
இதில், அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளில் உள்ளவர்களின் பெயர், முகவரி ஆகியவற்றை சேகரித்து வருவாய் ஆய்வாளர்கள் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். இந்த சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தப் பிரச்னை விவாதப் பொருளான நிலையில், திண்டுக்கல் ஆட்சியர் துர்கா, வட்டாட்சியரின் சுற்றறிக்கையை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். மேலும், அவர் குஜிலியம்பாறையிலிருந்து சென்னை வருவாய் நிர்வாக ஆணையரக அலுவலகத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
CPI(M) State Secretary P. Shanmugam has stated that the transfer of the Tahsildar, who sought details regarding the survey, reflects the government's poor approach.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.