தென்மாநில முதல்வர்கள் மாநாட்டை புறக்கணிக்கும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி!
தென்மாநில முதல்வர்கள் மாநாட்டை புறக்கணிக்கும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியைப் பற்றி...
தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடக்காமல் இருந்த நிலையில், 31-வது தென்மாநில முதல்வர்கள் மாநாடு சென்னையை அடுத்த கோவளத்தில் இரண்டு நாள்கள் நடக்கிறது.
இந்த நிகழ்வுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகிக்கும் நிலையில், மாநாட்டை நடத்தும் தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்றிரவு சென்னை வந்த நிலையில், அவரை முதல்வர் விஜய் நேரில் சென்று வரவேற்றார்.
Advertisement
Advertisement
இந்த மாநாட்டில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரம் மற்றும் புதுச்சேரி முதல்வர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அத்துடன் மாநில தலைமைச் செயலர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
முதல்வர் விஜய்யைத் தவிர, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், கேரள முதல்வர் வி.டி.சதீசன், ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர். ரேவந்த் ரெட்டி லண்டன் செல்லவிருப்பதால், துணை முதல்வர் மல்லுபாட்டி விக்ரமார்கா இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்.
தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்க புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியான துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகிய இருவருக்கும் அழைப்பு விடப்பட்டது. இந்த மாநாட்டில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. இதை மக்கள் மாளிகையும் உறுதி செய்தது. அதேநேரத்தில் மாநாட்டில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரி சார்பில் ஆளுநர் கைலாஷ்நாதன் மாநாட்டில் உரை நிகழ்த்த உள்ளதால் புறக்கணித்திருக்கலாம் என்ற தகவல்கள் தெரிவித்தாலும், தெளிவான காரணங்கள் வெளியாகவில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கம் வகிக்கும் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ், பாஜகவுடன் ஏற்பட்ட நீண்ட இழுபறிக்குப் பின்னர் அமைச்சரவை துறைகள் ஒதுக்கப்பட்டன. அதேநேரத்தில் பேரவைத் தலைவரைத் தேர்வு செய்வதில் இன்னும் இழுபறிகள் தொடர்கின்றன.
Puducherry Chief Minister N. Rangasamy skipped the 31st Southern Zonal Council meeting held at Kovalam near Chennai on August 20, 2026, chaired by Union Home Minister Amit Shah. Instead of the Chief Minister, Puducherry was represented at the high-level regional summit by Lieutenant Governor K. Kailashnathan.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.