நாட்டில் சரி பாதி முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்! 3-ஆம் இடம் பிடித்த விஜய்! எதில் தெரியுமா?
நாட்டில் சரி பாதி முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதும், சொத்து விவரத்தில் 3-ஆம் இடத்தில் முதல்வர் விஜய் இருப்பதும்..
நாட்டில் மொத்தமுள்ள முதல்வர்களில் 14 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சொத்துப் பட்டியலில் முதல்வர் விஜய் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் 31 முதல்வர்களில் கிட்டத்தட்ட 45 சதவிகிதம் அதாவது 14 முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பு வெளியிட்ட தரவு மூலம் தெரிய வந்துள்ளது.
இதில், 11 முதல்வர்கள் மீது, மிக மோசமான குற்ற வழக்குகள் அதாவது அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை மற்றும் பிணையில்லாத கைது உத்தரவு பிறப்பிப்பதற்கான அடிப்படை இருப்பதாகவும் தாக்குதல் நடத்தியது, கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
குறிப்பிடத்தக்க தகவல் என்னவென்றால், இரண்டு மாநில முதல்வர்கள் மீது கொலை முயற்சி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளனவாம்.
அனைத்து முதல்வர்களின் சொத்து மதிப்பையும் கூட்டி, அதன் சராசரியைப் பார்த்தால் ஒரு முதல்வரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.118.07 கோடியாக உள்ளது. 31 மாநில முதல்வர்களின் சொத்து விவரங்களை ஆராய்ந்ததில், 4 முதல்வர்களுக்கு ரூ.100 கோடிக்கும் மேல் சொத்து மதிப்பு உள்ளது தெரிய வந்துள்ளது.
சொத்து விவரங்களில் கர்நாடக முதல்வர் டி. சிவக்குமார் ரூ.1,413 கோடியுடன் முதலிடத்திலும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.931 கோடி சொத்துடன் இரண்டாமிடத்திலும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ரூ.648 கோடி சொத்துடன் மூன்றாம் இடத்திலும், அருணாச்சல முதல்வர் பீமா கண்டு ரூ.332 கோடியுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.
இதற்கு நேர்மாறாக, ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா ரூ.55.24 கோடி சொத்துடன் கடைசி இடத்தில் உள்ளார். மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி ரூ.85 லட்சம் சொத்துடனும், ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா ரூ.1,46 கோடி சொத்துடனும் கடைசி இடங்களைப் பிடித்திருக்கிறார்கள்.
நாட்டில் உள்ள மொத்தம் 31 முதல்வர்களில் தில்லி முதல்வர் ரேகா குப்தா மட்டுமே பெண் முதல்வராக உள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.