மோடி, அமித் ஷாவை விமர்சித்த அமைச்சர் வன்னி அரசு! கருத்தை நீக்கச் சொன்ன ஆதவ் அர்ஜுனா!
அமைச்சர் வன்னி அரசு கருத்தை ஆதவ் அர்ஜுனா நீக்கச் சொன்னது பற்றி...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அமைச்சர் வன்னி அரசு தெரிவித்த கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறை குறித்து உறுப்பினர்கள் விவாதித்துக் கொண்டிருந்தபோது, பாமக உறுப்பினர் கணேஷ் குமார் பேசுகையில், “நாடாளுமன்றத்தில் நியாயமான தொகுதி மறுவரையறை குறித்து பேசிய காங்கிரஸ், தற்போது தொகுதி மறுவரையறை கூடாது என்று நிலைப்பாட்டை மாற்றி பேசுகின்றனர். தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் வராது என்று அமித் ஷா உறுதியளித்துள்ளார்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் வன்னி அரசு, “தொகுதி மறுவரையறை மசோதாவில் இல்லாதவற்றை உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் பேசுகிறார். இல்லாததை மக்களவையில் பேசுவது ஏமாற்று வேலை. பாமக நண்பர்கள் மருத்துவர் ராமதாஸை காப்பாற்றுவதைவிட மோடியையும், அமித் ஷாவையும் காப்பாற்றுவதில்தான் இருக்கிறீர்கள்” என்றார்.
Advertisement
Advertisement
அமைச்சர் வன்னி அரசு பேச்சைக் குறுக்கிட்ட பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், “ஏமாற்றுகிறார்” என்ற வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.
தொடர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:
”அமைச்சர் வன்னி அரசு பேசிய பிரதமர் மோடி போன்ற கருத்துகளை அவைக் குறிப்பிலிருந்து எடுத்துவிடலாம். எந்த கட்சியைப் பற்றியும் நாம் பேச வேண்டாம். இது மாநில உரிமை சம்பந்தப்பட்ட பிரச்னை. இந்திரா காந்தி, வாஜ்பாயி உள்ளிட்டோர் பிரதமராக இருந்த போது, திமுக அழுத்தத்தால் சிறப்புச் சட்டம் கொண்டு வந்ததை ஏற்றுக் கொள்கிறோம்.
நீட், ஜிஎஸ்டி என அனைத்தும் நமக்கு எதிராக கொண்டு வந்த திட்டம். இதற்காக திமுகவும் போராடியுள்ளது. அவர்கள் சலுகை கொடுக்கிறார்கள் என்றால் அது தேர்தலுக்கானது. ஹிந்தி மாநிலங்களில் எண்ணிக்கை அதிகரிக்கும்.
மக்கள் தொகையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அதிக ஜிடிபி உள்ள மாநிலத்துக்கு அதிக எம்.பி.க்கள் என மத்திய அரசு கூறலாமே. ஏன் கொடுக்கவில்லை?.
தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் ஆக வேண்டும் என நான் கூறியது ஒரு கட்சியைச் சார்ந்து சொல்லவில்லை. ஏப்ரல் மாதத்தில் மசோதா நிறைவேறாததற்கு காரணம் திமுகதான். மாநில உரிமை என்று வரும்போது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியுடன் திமுகவும் இணைந்து நிற்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
Minister Vanni Arasu criticized Modi and Amit Shah; Aadhav Arjuna asked for the remarks to be withdrawn.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.