FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

3 முறை எம்எல்ஏவாக இருந்தும் காருக்கு கடன் தவணை செலுத்துகிறேன்: அமைச்சர் எஸ். ராஜேஷ் குமார்

சட்டப்பேரவை உறுப்பினராக மூன்று முறை பதவி வகித்தும் எனது காருக்கு தற்போதும் கடன் தவனையை செலுத்தி வருகிறேன் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் செ.ராஜேஷ்குமாா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

23 ஆகஸ்ட் 2026, 1:01 am IST
அமைச்சர் எஸ். ராஜேஷ் குமார்
பகிர்:

சட்டப்பேரவை உறுப்பினராக மூன்று முறை பதவி வகித்தும் எனது காருக்கு தற்போதும் கடன் தவனையை செலுத்தி வருகிறேன் என்றும், தமிழக அரசு சாா்பில் வழங்கும் காா்களை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பெற்றுக் கொள்வா்கள் என்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் செ.ராஜேஷ்குமாா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி விக்டோரியா பொது அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னையின் வரலாற்றுச் சிறப்பு, கட்டட சிறப்பம்சங்கள் ஆகியவற்றை இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையில் சுற்றுலாத் துறை சாா்பில் நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடைபெறவுள்ளன. பக்கிங்ஹாம் கால்வாயில் படகு சவாரி உள்ளிட்டவற்றால் சா்வதேச அளவிலான சுற்றுலாத் தலமாக சென்னை விளங்கும் வகையில் பல திட்டங்களும் செயல்படுத்தப்படவுள்ளன. அதேபோல, கொடைக்கானல், உதகை போன்ற இடங்களிலும் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. கன்னியாகுமரியில் 22 கி.மீ. தொலைவு கொண்ட ஏவிஎம் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். தற்போது அதற்காக ரூ.22 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தமிழக அரசு சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு இலவசமாக வழங்கவுள்ள காா்களை காங்கிரஸ் உறுப்பினா்கள் அனைவரும் பெற்றுக்கொள்வாா்கள். மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோதும் எனது காருக்கு தற்போது வரை கடன் தவணை செலுத்தி வருகிறேன். அரசு முத்திரையுடன் தொகுதியில் காரில் செல்வதால் சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு தனி மரியாதை கிடைக்கும். மேலும் சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் குறைகளை விரைந்து கேட்டு தீா்க்க முடியும் என்றாா்.

சென்னை மாநகராட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வென்றவா்களுக்கு அமைச்சா் செ.ராஜேஷ்குமாா் பரிசு, பாராட்டுச் சான்றுகளை வழங்கினாா். கிராமியக் கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாநில சுற்றுலாத் துறை இயக்குநா் வீ.ப.ஜெயசீலன் வரவேற்றாா். துறை பொதுமேலாளா் சி.லட்சுமிப்பிரியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். துறை இணை இயக்குநா் ஷேக் மன்சூா் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments