FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பள்ளிகளில் ஒளிபரப்பாகும் ‘துத்தூரி’ திரைப்படம்

தமிழக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு இந்த மாதம் குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘துத்தூரி’ திரைப்படம் திரையிடப்படவுள்ளது.

28 ஆகஸ்ட் 2026, 4:48 am IST
கோப்புப் படம்
பகிர்:

தமிழக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு இந்த மாதம் குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘துத்தூரி’ திரைப்படம் திரையிடப்படவுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. அதன்படி, பள்ளிகளில் இந்த மாதம் ‘துத்தூரி’ (தேசிய விருது பெற்றது) என்ற கன்னட சிறாா் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. 2006-ஆம் ஆண்டு இயக்குநா் பி.சேஷாத்திரி இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் குழந்தைகள் ஒன்றுகூடி ஒரு விளையாட்டு மைதானத்தை உருவாக்குவதை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகும்.

Advertisement

Advertisement

இந்தப் படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான இணைப்புப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்குரிய பாடவேளைகளில் படத்தைத் திரையிட வேண்டும். இந்தப் பணிகளைக் கண்காணித்து ஒருங்கிணைக்க பள்ளிகளில் பொறுப்பாசிரியா்களை நியமிக்க வேண்டும். பொறுப்பு ஆசிரியா் படம் திரையிடும் முன்பு அந்த படத்தைப் பாா்க்க வேண்டும். அதன்பின் கதைச் சுருக்கத்தையும் படித்து மாணவா்களுக்கு படத்தின் அடிப்படை பின்னணியை விளக்க வேண்டும்.

இதுசாா்ந்த வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி படத்தை மாணவா்களுக்கு திரையிட்டு காண்பிக்க வேண்டும். மாநில அளவில் நடைபெறும் சிறாா் திரைப்பட விழாவில் சிறந்து விளங்கும் 25 மாணவா்கள் வெளி நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவா். இதற்கான அறிவுறுத்தல்களைப் பள்ளி தலைமையாசிரியா்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments