மாணவர்களை விட அமைச்சர்களின் நாய்களுக்கு சிறந்த வசதி! அரசுப் பள்ளிகள் குறித்து அபிஜித் தீப்கே!
மகாராஷ்டிரத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலை குறித்து கரப்பான் கட்சி ஒருங்கிணைப்பாளர் கூறுவது தொடர்பாக..
மகாராஷ்டிரத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களை விட அமைச்சர்களின் நாய்களுக்கே சிறந்த வசதிகள் கிடைப்பதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அபிஜித் தீப்கே வலியுறுத்தினார்.
கடந்த வாரம் அரசுப் பள்ளிகளைச் சீரமைப்போம் என்ற பிரசாரத்தைத் தொடங்கிய கரப்பான் கட்சி ஒருங்கிணைப்பாளர் அபிஜித் தீப்கே, லாத்தூர் மாவட்டத்தின் அவுசா தாலுகாவில், உஜனி கிராமத்தில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளியை நேரில் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
Advertisement
Advertisement
அரசுப் பள்ளிகளில் முறையான வகுப்பறைகள், இருக்கைகள், கழிப்பறைகள், பாதுகாப்பான அணுகு சாலைகள் போன்ற அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலையில் தொடர்ந்து இயங்கும் பள்ளிகளின் சூழலுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் அமைச்சர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார்.
சில பள்ளிகளில் மாணவர்கள் "விலங்குகளை விட மோசமாக" நடத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இது மாணவர்களின் எதிர்காலம் மற்றும் வாழ்க்கை தொடர்பான விஷயம். மாணவர்களுக்காக அரசியல் தலைவர்கள் எதுவும் செய்யாதபோது, மக்கள் ஏன் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்? அவர்கள் ஹெலிகாப்டர்களில் பயணம் செய்வதற்காகவா மக்கள் வாக்களிக்கிறார்கள்?
தங்கள் குழந்தைகள் எந்தச் சூழலில் படிக்கிறார்கள் என்பதை மக்கள் பார்க்க வேண்டும். இந்த அமைச்சர்களின் நாய்களுக்குக்கூட இதைவிடச் சிறந்த வசதிகள் கிடைக்கின்றன.
எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அரசியல் கட்சித் தலைவர்கள் முதலில் கல்விக்காகப் பணியாற்ற வேண்டும், அதன் பிறகே வாக்குக் கேட்க வர வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.
அரசியலுக்காக நாம் சாதி, சமூகக் கொடிகளை ஏந்தி வீட்டை விட்டு வெளியே வருகிறோம். அதேபோல, நம் குழந்தைகளின் பள்ளிகளுக்காகவும் நாம் ஒன்றிணைந்து வெளியே வர வேண்டும். இவர்கள் மதம் ஆபத்தில் இருப்பதாகத் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.
இத்தனை ஆண்டுகளாக அழியாத மதம், உங்கள் ஆட்சிக் காலத்தில் மட்டும் அழிந்துவிடப் போகிறதா? மதம் ஒன்றும் அழிந்துபோகாது, ஆனால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படலாம்.
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள, அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் தங்கள் சொந்தக் குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கே அனுப்ப வேண்டும். பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக உள்ள தாதா பூசே, அந்தப் பதவியிலிருந்து விலக வேண்டும்.
பல ஆண்டுகளாக ஆட்சியிலிருந்தும், அரசுப் பள்ளிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவருவதில் ஆளும் தரப்பு தோல்வியடைந்துவிட்டது. இன்னும் பல பள்ளிகளில் தகரக் கூரைகள் ஒழுகும் நிலையிலும், போதுமான இருக்கைகள் இல்லாமலும் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பத்து ஆண்டுகளில் இந்த அடிப்படைப் பிரச்சினைகளைக் கூட தீர்க்க முடியவில்லை என்றால், அரசு என்னதான் சாதித்தது என்பதை விளக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.